புவனேஸ்வரி சிலை திறப்பு விழா; தாமதம் குறித்து அமைச்சர் விளக்கம்
புவனேஸ்வரி சிலை திறப்பு விழா; தாமதம் குறித்து அமைச்சர் விளக்கம்
ADDED : நவ 01, 2024 11:00 PM

பெங்களூரு ; கன்னட ராஜ்யோத்சவா நாளன்று, விதான்சவுதா முன் புவனேஸ்வரி சிலை திறக்க வேண்டும் என்ற முதல்வர் சித்தராமையாவின் ஆசை நிறைவேறவில்லை. சிலை திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கன்னடம், கலாச்சாரத் துறை அமைச்சர்சிவராஜ் தங்கடகி நேற்று அளித்த பேட்டி:
மாநிலத்துக்கு கர்நாடகா என பெயர் சூட்டி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை சிறப்பிக்கும் வகையில், கன்னடம், கலாச்சாரத்துறை சார்பில் பெங்களூரின் விதான் சவுதா வளாகத்தில், புவனேஸ்வரி தேவி சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது.
விதான்சவுதாவில் மகாத்மா காந்தி சிலை வடித்த, டில்லியை சேர்ந்த நிறுவனத்திடம், புவனேஸ்வரியின் வெண்கல சிலை உருவாக்கும் பணியை ஒப்படைத்துள்ளோம். 23 கோடி ரூபாய் செலவில் சிலை தயாராகிறது. நிறுவனம் இன்னும் பணியை முடிக்கவில்லை. எனவே இன்று (நேற்று) புவனேஸ்வரி சிலையை திறக்க முடியவில்லை.
சிறப்பான முறையில் சிலையை தயாரிக்க வேண்டும். இல்லையென்றால் நன்றாக இருக்காது. அவசரம் காட்டினால் சிலையின் தோற்றம் சரியாக வராது. எனவே தாமதமாவதாக நிறுவனத்தினர் கூறியுள்ளனர். இம்மாதம் இறுதியில் சிலை தயாராகும். அதன்பின் சிலை திறப்பு விழா ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.

