தூண்டி விடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: பிரதமர் மோடி உறுதி
தூண்டி விடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: பிரதமர் மோடி உறுதி
UPDATED : ஜூலை 26, 2024 11:47 AM
ADDED : ஜூலை 26, 2024 10:52 AM

கார்கில்: ‛‛ பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்'' என பிரதமர் மோடி கூறினார்.
கடமை
கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு டிராசில் உள்ள போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டிற்காக உயிர்தியாகம் செய்ததற்காக ராணுவ வீரர்களுக்கு தேசம் எப்போதும் கடமைப்பட்டு உள்ளது. 1999 ல் கார்கிலில் ராணுவ வீரர்களை சந்தித்த அனுபவம் உள்ளது. கார்கில் போரில் உயிர்தியாகம் செய்தவர்களுக்கு தலைவணங்குகிறேன்.
பதிலடி
பாகிஸ்தான் தனது தவறுகளில் இருந்து இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. அந்நாடு, பயங்கரவாதத்தை தூண்டிவிடுவதுடன், பயங்கரவாதிகளை பின்னால் இருந்து இயக்கி வருகிறது. அவர்களால், இந்தியாவை ஒரு போதும் வீழ்த்த முடியாது. எந்தவொரு பயங்கரவாத சவால்களும் முறியடிக்கப்படும்.
பயங்கரவாதிகளின் சதி நிறைவேற அனுமதிக்க மாட்டோம். பயங்கரவாதத்தை தூண்டிவிடுபவர்களின் திட்டம் ஒரு போதும் நிறைவேறாது. பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்.பயங்கரவாதத்தின் ஒவ்வொரு முயற்சியையும் இந்தியா வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது. எதிரிகளுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும்.
காஷ்மீர்
370 நீக்கிய பிறகு காஷ்மீர் வளர்ச்சியை கண்டுள்ளது.காஷ்மீரில் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாத்துறை வளர்ந்து வருகிறது. புது எதிர்காலத்தை பற்றி காஷ்மீர் சிந்தித்து வருகிறது. பல தசாப்தங்களுக்கு பிறகு சினிமா ஹால் திறக்கப்பட்டது. லடாக்கில் இயல்பு வாழ்க்கை திரும்ப அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு உள்ளது.
அரசியல்
இளைஞர்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகிறது. பென்சன் தொகையை சேமிப்பதற்காக அக்னிவீர் திட்டம் செயல்படுத்தவில்லை. பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அக்னிவீரர்கள் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.