ADDED : செப் 08, 2025 03:37 AM

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் ஓணப்பண்டிகையை முன்னிட்டு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான சுற்றுலாப் பகுதிகளை ஆறு நாட்களில் 48,416 பயணிகள் ரசித்து சென்றுள்ளனர்.
இம்மாவட்டத்தில் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் கீழ் 12 சுற்றுலா பகுதிகள் உள்ளன.
அவற்றை ஓணம் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு செப்.,1 முதல் செப்., 6 வரை 48,416 பயணிகள் ரசித்துச் சென்றனர். அதன் மூலம் அரசுக்கு ரூ.9 லட்சத்து 68 ஆயிரத்து 320 வருவாய் கிடைத்தது. இம்முறையும் வழக்கம் போல் வாகமண்ணிற்கு அதிக பயணிகள் சென்றனர்.
வாகமண் மலைகுன்றுக்கு 13,928, சாகச பூங்காவுக்கு 11,596 என 25,524 பேர் சென்றனர். பாஞ்சாலிமேடு 4322, மூணாறு தாவரவியல் பூங்கா 4314, ராமக்கல் மேடு 3444, ஸ்ரீ நாராயணபுரம் 2488, இடுக்கி ஹில் வியூ பூங்கா 2560, மாட்டுப்பட்டி அணையில் படகு சவாரிக்கு 1708 பேர் சென்றனர். அருவிகுழிக்கு 652, ஆமைபாறைக்கு 833 பேர் என மிகவும் குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் சென்றனர்.
இம்மாவட்டத்தில் மின்வாரியத்தினரின் பராமரிப்பில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடுக்கி அணையை பார்க்க செப்.1 முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 6 நாட்களில் அணையை 4750 பேர் ரசித்து சென்றுள்ளனர்.