அதிகரிக்கும் மின் தேவை ஓய்வில்லா உற்பத்தி நிலையங்கள்
அதிகரிக்கும் மின் தேவை ஓய்வில்லா உற்பத்தி நிலையங்கள்
ADDED : பிப் 27, 2024 06:14 AM
பெங்களூரு, : கர்நாடகாவில் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அனல் மின் உற்பத்தி நிலையங்கள், ஓய்வின்றி செயல்படுகின்றன. அனைத்து யூனிட்களிலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கர்நாடகாவில் 2023ல் எதிர்பார்த்த அளவில் மழை பெய்யவில்லை. பல தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டன. ஆறுகள், அணைகள் வறண்டுள்ளன. மழைக்காலம், குளிர்க்காலத்தில் நீர் மின் உற்பத்தி நிலையங்கள், சோலார் மற்றும் காற்றாலை மூலமாக, மின்சாரம் உற்பத்தி செய்து, தேவையான மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.
தாக்கம் அதிகரிப்பு
கோடைகாலம் துவங்குவதற்கு முன்பே, மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. எனவே மின் தேவை, நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. 31 கோடி யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. தற்போது அனல் மின் உற்பத்தி நிலையங்களில், பல யூனிட்களில் மின் உற்பத்தி செய்து, சூழ்நிலையை சமாளிக்கின்றனர்.
அடுத்த மூன்று, நான்கு மாதங்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் என, ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மின் தேவை மேலும் அதிகரிக்கும். தேவைக்கேற்றபடி மின்சாரம் வினியோகிப்பது பெரும் சவாலாக இருக்கும் என, கர்நாடக மின் ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
இதுதொடர்பாக மின் ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
வரும் நாட்களில் அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க, திட்டம் வகுத்துள்ளோம். கிருஷ்ணா ஆற்றில் நீர் மின் உற்பத்திக்கு தேவையான தண்ணீரை சேகரிப்பதுடன், நிலக்கரி திறனை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளோம். தற்போது 2.50 லட்சம் டன் நிலக்கரி இருப்புள்ளது.
ராய்ச்சூர்
ஆர்.டி.பி.எல்., எனும் ராய்ச்சூர் அனல் மின் உற்பத்தி நிலையத்தில், இரண்டாவது யூனிட் பழுதடைந்திருந்தது. இதை சரி செய்யும் பணிகள் நடக்கின்றன. 1,720 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின் உற்பத்தி நிலையத்தின் எட்டு யூனிட்கள் உள்ளன. இவற்றில் 210 மெகாவாட் திறன் கொண்ட 1, 3 மற்றும் 4வது யூனிட்கள் மூடப்பட்டன. 2, 5, 6, 7, 8வது யூனிட்களில், 890 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறது.
யரமரஸ் அனல் மின் உற்பத்தி நிலையம் 1,600 மெகாவாட் திறன் கொண்டது. இரண்டு யூனிட்கள் செயல்படுகின்றன. இவற்றில் தலா 550 மெகாவாட் வீதம் மின்சாரம் உற்பத்தியாகிறது.
பல்லாரி அனல் மின் உற்பத்தி நிலையத்தில், 880 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் பற்றாக்குறை ஏற்படாமல், சூழ்நிலையை சமாளிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
