ADDED : ஆக 07, 2025 09:06 PM

புதுடில்லி; லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வீட்டில் இண்டி கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
டில்லியில் இன்று நிருபர்களை சந்தித்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், கர்நாடகா வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள், போலி முகவரிகள் என மோசடி நடந்தது குறித்தும், தகுதி வாய்ந்தவர்கள் நீக்கப்பட்டதுடன், தகுதிஇல்லாதவர்களும் சேர்க்கப்பட்டதாக புகார் தெரிவித்து இருந்தார். இதனை தேர்தல் கமிஷன் மறுத்துஇருந்தது
இந்நிலையில், டில்லியில் ராகுல் வீட்டில் 'இண்டி' கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா,காங்கிரஸ் தலைவர் கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்,சிவசேனா வின் உத்தவ் தாக்கரே,தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்,திமுக எம்பி திருச்சி சிவா, திரிணமுல் காங்கிரசின் அபிஷேக் பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிகர்நாடகா முதல்வர் சித்தராமையா, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இந்த கூட்டம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., கவுரவ் கோகாய் கூறுகையில், இண்டி கூட்டணி தலைவர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்களை தனது வீட்டுக்கு ராகுல் கலந்துரையாட அழைப்பு விடுத்தார். இதில் 24 கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். நேர்மறையான சூழலில் பேச்சுவார்த்தை நடந்தது. பொது மக்களின் நலன் மற்றும் தேச நலன் சார்ந்து பார்லிமென்டில் அரசை கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து கலந்துரையாடல் நடந்தது. போலி வாக்காளர் பட்டியல் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் பேசினார்.பல்வேறு கட்சி தலைவர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். இது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டிய ஆதாரங்களை இங்கு ராகுல் பகிர்ந்து கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி .ராஜா கூறியதாவது: வரும் 11ம் தேதி தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி பார்லிமென்டில் இருந்து பேரணி நடக்கும் என தெரிவித்துள்ளனர். இண்டி கூட்டணி தலைவர்கள் கூட்டத்துக்கு ராகுல் முதல்முறையாக அழைப்பு விடுத்துள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களுடன் நடந்த கலந்துரையாடியதை வரவேற்கிறோம். இன்றைய கூட்டம் ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. வாக்காளர்பட்டியல் சிறப்பு திருத்தப்பணி, தேர்தல் கமிஷன் செயல்பாடு, வாக்காளர் பட்டியலில் நடக்கும் குளறுபடிகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிராவில் நடந்த குளறுபடிகள் குறித்து ராகுல் விளக்கினார். பீஹாரில் இன்று நடந்தது, நாடுமுழுதும் நடக்க வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார். இது தீவிரமான விஷயம். நாட்டின் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட சவால். இதனை கேட்ட தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர் என்றார்.