தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்கும் தீர்மானம் லோக்சபா, ராஜ்யசபாவில் அளித்தது 'இண்டி' கூட்டணி
தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்கும் தீர்மானம் லோக்சபா, ராஜ்யசபாவில் அளித்தது 'இண்டி' கூட்டணி
ADDED : மார் 14, 2026 01:30 AM

- நமது டில்லி நிருபர் -
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மான நோட்டீசை, லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளிலும், காங்., - தி.மு.க., - சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய, 'இண்டி' கூட்டணி நேற்று சமர்ப்பித்தது.
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில், தகுதிவாய்ந்த ஏராளமான வாக்காளர்களை நீக்குவதாகவும், இண்டி கூட்டணி குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கம் செய்வதற்கான தீர்மான நோட்டீசை, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், இண்டி கூட்டணி நேற்று சமர்ப்பித்தது.
லோக்சபாவில், 130; ராஜ்யசபாவில், 63 எம்.பி.,க்கள் நோட்டீசில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதற்கு, டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் ஆதரவு அளித்துள்ளது. தவிர, சுயேச்சை எம்.பி.,க்கள் சிலரும் நோட்டீசில் கையெழுத்திட்டு உள்ளனர்.
நம் வரலாற்றிலேயே தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக பதவி நீக்க நோட்டீஸ் வழங்கப்படுவது இதுவே முதன்முறை.
ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு இரு சபைகளிலும் பெரும்பான்மை இருப்பதால், ஞானேஷ் குமாருக்கு எதிரான பதவி நீக்க நோட்டீஸ் தோற்கடிக்கப்படுவது உறுதி.
இது தெரிந்தும், அவருக்கு நெருக்கடி கொடுக்கவே இந்த தீர்மான நோட்டீசை இண்டி கூட்டணி சமர்ப்பித்துள்ளது.

