இந்தியா - நமீபியா கிரிக்கெட் போட்டிகள்: போக்குவரத்து மாற்றம்
இந்தியா - நமீபியா கிரிக்கெட் போட்டிகள்: போக்குவரத்து மாற்றம்
ADDED : பிப் 13, 2026 12:55 AM

புதுடில்லி : இந்தியா - நமீபியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த, டி - 20 போட்டியை முன்னிட்டு, டில்லி போக்குவரத்து போலீசார் பல போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளனர்.
இந்தியா வந்துள்ள நமீபியா நாட்டின் கிரிக்கெட் அணி, டி - 20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதை முன்னிட்டு, டில்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தை சுற்றிலும், போக்குவரத்து மாற்றங்களை டில்லி போலீசார் அறிவித்துள்ளனர்.
குறிப்பாக, பகதுார் ஷா ஸபர் மார்க் மற்றும் ஜவஹர்லால் நேரு மார்க் பகுதிகளில், விளையாட்டு போட்டிகள் நடக்கும் நேரங்களில் போக்கு வரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மாலை, 5:00 மணி முதல், நள்ளிரவு வரை போக்குவரத்து கெடுபிடிகள் அதிகம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, அருண் ஜெட்லி ஸ்டேடியத்தை சுற்றி வாகனங்கள் நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பார்க்கிங் லேபிள்களை ஒட்டிய வாகனங்கள் மட்டுமே இந்த வளாகத்தில் நிறுவத்தப்படும்.
அந்த லேபிளில், வாகனத்தின் உரிமையாளர் மற்றும் வாகனத்தை ஓட்டுபவரின் மொபைல் எண் எழுதப்பட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, மாதா சுந்தரி சாலை, ராஜ்காட் பவர் ஹவுஸ் மற்றும் வெலோடிராம் சாலைகளில், பார்வையாளர்களுக்காக இலவசமாக வாகன நிறுத்தங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிரிக்கெட் ஆர்வலர்களும், பார்வையாளர்களும், கிரிக்கெட் போட்டியை நடத்துபவர்களுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

