பட்ஜெட்டில் பாரபட்சம் எனக்கூறி இண்டியா கூட்டணி ஆர்ப்பாட்டம்
பட்ஜெட்டில் பாரபட்சம் எனக்கூறி இண்டியா கூட்டணி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 24, 2024 10:57 AM

புதுடில்லி: மத்திய பட்ஜெட் பாரபட்சமானது எனக்கூறி, பார்லிமென்ட்டின் நுழைவு வாயில் முன்பு இண்டியா கூட்டணியின் எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (ஜூலை 23) பட்ஜெட் தாக்கல் செய்தபோது, பீஹார், ஆந்திராவுக்கு பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் போது எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பலர் சபைக்குள் குரல் எழுப்பினர். தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் எம்.பி.,க்கள் பலர், 'எங்கள் மாநிலத்திற்கு ஒன்றுமே இல்லையா' என, சத்தமாக கேட்டனர். குறிப்பாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்குவதாக அமைச்சர் கூறியபோது, தமிழக எம்.பி.,க்கள் எழுந்து கடுமையாக வாக்குவாதம் செய்தனர். அவர்களை சபாநாயகர் அமைதிப்படுத்தினார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்ததும் மாலையில், காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில், இண்டியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், பட்ஜெட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பார்லி., நுழைவு வாயிலின் முன்பு, இண்டியா கூட்டணி எம்.பி.,க்கள் 'பா.ஜ., கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காமல் பாரபட்சம் காட்டுவதாக' கூறி பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.