ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்கு இந்தியா நேரடி தகுதி
ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்கு இந்தியா நேரடி தகுதி
ADDED : நவ 09, 2025 03:13 PM

புதுடில்லி: 2028 ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் 128 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தொடருக்கு இந்திய அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் (1900) முதல் மற்றும் கடைசியாக கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போது இங்கிலாந்து அணி தங்கம் வென்றது. அதற்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் விரும்பினர். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் 34வது ஒலிம்பிக் தொடரில் 128 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பிரதான மைதானம் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்சில் இருந்து 48 கி.மீ., துாரத்தில் உள்ள தெற்கு கரோலினாவின் பொமோனாவில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கவுள்ளன.
டி-20 போட்டியாக நடக்கும் இத்தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி சார்பில் தலா 6 அணிகள் பங்கேற்க உள்ளன. இதனை ஐசிசி உறுதிப்படுத்தியிருந்தது. ஜூலை 12 முதல் ஜூலை 29 வரை மொத்தம் 28 போட்டிகள் நடக்கின்றன. பெண்கள் அணிக்கான இறுதிப்போட்டி ஜூலை 20 அன்றும், ஆண்கள் இறுதிப்போட்டி ஜூலை 29 அன்றும் நடைபெற உள்ளது.
இதனிடையே, இந்தத் தொடர் தொடர்பாக துபாயில், சர்வதேச ஒலிம்பிக் சங்கம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதில், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு கண்டத்திலும் தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணி ஒலிம்பிக் தொடரில் தகுதி பெறும் அணிகளாக அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி,
ஆசியா கண்டத்தில் இந்திய அணியும்
ஐரோப்பா கண்டத்தில் இங்கிலாந்து அணியும்
ஆப்ரிக்கா கண்டத்தில் தென் ஆப்ரிக்கா அணியும்
ஓஸியானியா கண்டத்தில் ஆஸ்திரேலியா அணியும் தகுதி பெறுகின்றன.
5வது இடத்தில் போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில் அமெரிக்க கண்டத்தில் இருந்து அமெரிக்கா தகுதி பெற வாய்ப்பு உள்ளது. அதிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி போட்டியில் உள்ளது.
ஆறாவது அணியை தேர்வு செய்வது குறித்து குவாலிபயர் முறையில் தேர்வு செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் போட்டியில் உள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

