விழலுக்கு இறைக்கும் நீர்; மாலத்தீவுக்கு மீண்டும் நிதி வழங்கியது இந்தியா!
விழலுக்கு இறைக்கும் நீர்; மாலத்தீவுக்கு மீண்டும் நிதி வழங்கியது இந்தியா!
ADDED : செப் 21, 2024 07:37 AM

புதுடில்லி: மாலத்தீவுக்கு வழங்கப்படும் 50 மில்லியன் டாலர் நிதியுதவியை மேலும் ஓர் ஆண்டுக்கு இந்தியா நீட்டித்துள்ளது.
அண்டை நாடான மாலத்தீவில் இந்திய எதிர்ப்பு பிரசாரம் செய்து ஆட்சியை கைப்பற்றியவர் முகமது முய்சு. சீனாவுடன் நட்புறவு பாராட்டிய அவர், இந்திய விரோத செயல்பாடுகளை அதிகப்படுத்தினார். மாலத்தீவு மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் அங்கு முகாமிட்டிருந்த இந்திய ராணுவத்தினரை வெளியேற்றினார். தொடர்ச்சியான இந்திய விரோத செயல்பாடுகள், இந்தியாவுக்கு எதிரான அமைச்சர்களின் வெறுப்பு பிரசாரம் காரணமாக அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிந்தது.
அன்றாட வருவாய்க்கு இந்திய சுற்றுலாப் பயணிகளை மட்டுமே நம்பி இருந்த மாலத்தீவுகள், இதனால் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத அளவுக்கு அன்னிய செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு சீனாவும் உதவி செய்யவில்லை. இந்த நிலையில் தான், மீண்டும் உதவி கேட்டு இந்தியாவிடம் வந்துள்ளது மாலத்தீவு அரசு.
50 மில்லியன் டாலர்
இந்தியா கடந்தாண்டு வழங்கிய 50 மில்லியன் டாலர் அவசர கால நிதியுதவியை, இந்தாண்டும் நீட்டிக்கும்படி மாலத்தீவு வேண்டுகோள் விடுத்தது. இதனை ஏற்றுக்கொண்ட இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மூலம் வழங்கப்படும் 50 மில்லியன் டாலர் நிதியுதவியை மேலும் ஒரு ஆண்டு நீட்டித்துள்ளது.
இந்தியாவுக்கு நன்றி
இது குறித்து மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சர் அஹ்மத் அதீப் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், '50 மில்லியன் டாலர் நிதியுதவியை நீட்டித்ததற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இது நமது இருநாடுகளுக்கு இடையே உறவை மேலும் வலுப்படுத்துகிறது. பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை நோக்கி மாலத்தீவின் பாதையை வலுப்படுத்தும்' என குறிப்பிட்டுள்ளார்.