ADDED : அக் 29, 2025 03:03 PM

புதுடில்லி: ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள சனே டகாய்ச்சிக்கு தொலைபேசியில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா-ஜப்பான் உறவு அவசியம் என சமூகவலைதளத்தில் மோடி பதிவிட்டுள்ளார்.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததை அடுத்து, பிரதமர் ஷிகெரு இஷிபா தன் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். பின்னர் புதிய பிரதமராக சனே டகாய்ச்சி தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவர் பிரதமராக பதவியேற்றார். ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையையும் சனே டகாய்ச்சி பெற்றுள்ளார். புதிய பிரதமராக பதவியேற்ற டகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை: ஜப்பான் பிரதமர் சானே டகாய்ச்சி உடன் தொலைபேசியில் பேசினேன். பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ஜப்பான் உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தோம். உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு உள்ளிட்டவைக்கு இந்தியா-ஜப்பான் உறவுகள் மிக முக்கியம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

