தத்தளிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம்: நிவாரணப் பொருட்களுடன் சென்ற ஐ.என்.எஸ்., சுகன்யா!
தத்தளிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம்: நிவாரணப் பொருட்களுடன் சென்ற ஐ.என்.எஸ்., சுகன்யா!
UPDATED : டிச 01, 2025 02:24 PM
ADDED : டிச 01, 2025 02:23 PM

புதுடில்லி: புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவி செய்வதற்காக, நிவாரணப்பொருட்களுடன் இந்திய கடற்கடை கப்பல் ஐ.என்.எஸ்., சுகன்யா, திரிகோணமலை துறைமுகத்துக்கு சென்றுள்ளது.
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக, கடந்த சில நாட்களாக நம் அண்டை நாடான இலங்கையில் கனமழை கொட்டித் தீர்த்தது. பலத்த சூறாவளி காற்றால், இலங்கை கிழக்கு பகுதியின் பெரும்பாலான இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. கொழும்பு, மட்டக்களப்பு உட்பட நாடு முழுதும் கொட்டிய மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலியானோர் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது.
மாயமான 350க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுஉள்ளனர். இங்கு, அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கைக்கு உதவும் வகையில், நம் விமானப் படை விமானங்கள் மற்றும் கடற்படையின் கப்பல்கள் அந்நாட்டுக்கு விரைந்துள்ளன.
'ஆப்பரேஷன் சாகர் பந்து' திட்டத்தின் வாயிலாக, நம் விமானப் படைக்கு சொந்தமான இரு விமானங்களில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 80 பேர் மற்றும் 21 டன் அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்கு இந்தியா அனுப்பியது. மேலும் ஒரு விமானத்தில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
தற்போது நிவாரணப்பொருட்களுடன் இந்திய கடற்கடை கப்பல் ஐ.என்.எஸ்., சுகன்யா, திரிகோணமலை துறைமுகத்துக்கு சென்றுள்ளது. இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார். இது தவிர, கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலில் இருந்து இரு ஹெலிகாப்டர்கள், அங்கு மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

