தங்கம் வாங்கி குவிப்பதில் சீனாவை விஞ்சியது இந்தியா!
தங்கம் வாங்கி குவிப்பதில் சீனாவை விஞ்சியது இந்தியா!
ADDED : அக் 31, 2024 05:43 PM

புதுடில்லி: தங்கம் வாங்குவதில் சீனாவை விஞ்சியது இந்தியா என உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தங்கம் விலை என்ன தான் உயர்ந்து கொண்டே போனாலும், வாங்குவது மட்டும் குறைந்தபாடில்லை. இதனை உறுதி செய்யும் வகையில், தங்கம் வாங்குவதில் இந்திய நுகர்வோர் சீனர்களை மிஞ்சி விட்டனர் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக தங்க கவுன்சில் வெளியிட்ட உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தங்க நாணயங்கள் மற்றும் தங்க கட்டிகள் அதிக கொள்முதல் செய்ததன் மூலம், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், சீனாவுடன் ஒப்பிடும்போது இந்திய நுகர்வோர் 51% அதிகமாக தங்கத்தை வாங்கியுள்ளனர்.
இந்த காலகட்டத்தில், சீனர்கள் 165 டன் தங்கத்தை வாங்கி உள்ளனர். ஆனால் இந்தியர்கள் 248.3 டன் தங்கத்தை வாங்கியுள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவுக்கு தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் (மூன்றாம் காலாண்டு) இந்தியாவின் தங்கத்திற்கான தேவை 18% அதிகரித்துள்ளது.இதற்கு, தங்கம் மீதான இறக்குமதி வரி 15% லிருந்து 6% ஆக, குறைத்து ஜூலை 23ம் தேதி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது தான் காரணம்.
இந்த ஆண்டில் மூன்றாம் காலாண்டில், சீனர்கள் 103 டன் தங்க நாணயங்கள் மற்றும் பார்கள் வாங்கிய நிலையில், இந்தியர்கள் 172 டன் தங்கம் பார், நாணயம் வாங்கியுள்ளனர். இவ்வாறு தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து, உலக தங்க கவுன்சிலின், இந்திய பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி சச்சின் ஜெயின் கூறியதாவது: ஜூலை மாதம் கடைசியில், தங்கம் வாங்கும் நுகர்வோர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. செப்டம்பர் மாதம் பாதி வரை, அதிகரித்த வண்ணமே இருந்தது.தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தது. தங்கத்தில் முதலீடு செய்வதற்கு, அதிகமான பேர் விரும்புகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.