மன்மோகன் சிங்கின் பங்களிப்பை பாரதம் என்றென்றும் நினைவு கொள்ளும்; ஆர்.எஸ்.எஸ்., இரங்கல்
மன்மோகன் சிங்கின் பங்களிப்பை பாரதம் என்றென்றும் நினைவு கொள்ளும்; ஆர்.எஸ்.எஸ்., இரங்கல்
ADDED : டிச 27, 2024 05:39 PM

புதுடில்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பங்களிப்பை இந்த பாரதம் என்றென்றும் நினைவில் கொள்ளும் என்று ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரும், நிதியமைச்சருமான மன்மோகன் சிங்,92, நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை காலை 9.30 மணியளவில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் மற்றும் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே ஆகியோர் கூட்டாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில்; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு ஒட்டுமொத்த நாட்டையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், அவரை விரும்புபவர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
சாதாரண பின்னணியில் இருந்து வந்தாலும், நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகித்தவர். புகழ்பெற்ற பொருளாதார நிபுணராக இருந்து அவர் நாட்டிற்கு வழங்கிய பங்களிப்பை என்றென்றும் இந்த பாரதம் நினைவில் கொள்ளும், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

