‛இண்டியா' கூட்டணியை பார்த்து பயப்பட மாட்டேன்: பிரதமர் மோடி
‛இண்டியா' கூட்டணியை பார்த்து பயப்பட மாட்டேன்: பிரதமர் மோடி
ADDED : மார் 31, 2024 04:50 PM

மீரட்: ‛ இண்டியா' கூட்டணியை பார்த்து பயப்பட மாட்டேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உ.பி., மாநிலம் மீரட்டில் தேர்தல் பிரசாரத்தை துவக்கிய பிரதமர் மோடி பேசியதாவது: 2014, 2019 ல் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை மீரட் நகரில் இருந்து துவக்கினேன். 2024லும் முதல் பிரசாரத்தை மீரட் நகரில் இருந்து தான் துவக்குகிறேன். இந்த தேர்தல் ஆட்சி அமைப்பதற்கு மட்டும் அல்ல. இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றவும், உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதற்குமான தேர்தல்.
உலகளவில் 11வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருந்த போது, நாட்டில் வறுமை அதிகரித்தது. ஆனால், 5வது இடத்திற்கு வந்த போது, 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியேறினர். 3வது இடத்திற்கு வரும் போது, வறுமை முற்றிலும் அகற்றப்படுவதுடன், அதிகாரம் பெற்ற மத்திய தர வர்க்கத்தினர், நாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருப்பார்கள்.
தற்போது வரை வளர்ச்சிக்கான டிரைலரை மட்டும் பார்த்துள்ளீர்கள். நாட்டை இன்னும் முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வோம். தேஜ கூட்டணி அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை மக்கள் முன்பு உள்ளது.
3வது முறை ஆட்சி அமைக்க பா.ஜ., அரசு தயாராக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை உருவாக்கி உள்ளோம். அடுத்த ஆட்சியில் முதல் 100 நாட்களில் மிகப்பெரிய கொள்கைகளுக்காக பணியாற்றுகிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில் எண்ணிப் பார்க்க முடியாத சாதனைகள் படைக்கப்பட்டு உள்ளது. முன்னர் சாத்தியம் இல்லாமல் இருந்த ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் அங்கு தரிசனம் செய்து வருகின்றனர்.
அதேபோல், காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து என்பது கற்பனையானது. தற்போது அச்சட்டம் நீக்கப்பட்டதால், அம்மாநிலம் வளர்ச்சி பெற்று வருகிறது. இதனால், பா.ஜ.,வுக்கு 370 தொகுதிகள் என்று மக்கள் ஆசி வழங்கி வருகின்றனர்.
ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்ன தடை வந்தாலும் அதனை நிறுத்த மாட்டேன். ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து ‛ இண்டியா' கூட்டணியை உருவாக்கி உள்ளனர். அக்கூட்டணியை கண்டு பயப்பட மாட்டேன். ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை துவக்கி உள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

