செக் சிறையில் உள்ள இந்தியருக்கு துாதரக உதவி கோரிய மனு தள்ளுபடி
செக் சிறையில் உள்ள இந்தியருக்கு துாதரக உதவி கோரிய மனு தள்ளுபடி
ADDED : ஜன 05, 2024 01:08 AM
புதுடில்லி, காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான் கொலை முயற்சி வழக்கில் கைதாகி, செக் குடியரசு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் நிகில் குப்தாவுக்கு துாதரக உதவி கோரி, அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
குற்றச்சாட்டு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வாழ்ந்து வரும் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுானை, அமெரிக்க மண்ணில் வைத்து கொலை செய்ய முயற்சி நடந்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.
இந்த விவகாரத்தில், இந்தியாவை சேர்ந்த நிகில் குப்தா, 52, என்பவர் வாடகை கொலையாளியாக செயல்பட்டதாகவும் அந்த குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசில், கடந்த ஆண்டு ஜூன் 30ல், நிகில் குப்தா கைது செய்யப்பட்டார்.
அங்குள்ள தனிமை சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், நிகில் குப்தாவுக்கு துாதரக உதவி வழங்க உத்தரவிடக் கோரி, அவரது குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
வியன்னா ஒப்பந்தப்படி, துாதரக உதவி பெற உங்களுக்கு உரிமை உள்ளது. அதை நீங்கள் ஏற்கனவே பெற்று விட்டீர்கள்.
அனுமதி
வெளிநாட்டு நீதிமன்றத்தின் அதிகார வரம்பு, இறையாண்மை மற்றும் அந்நாட்டின் சட்டத்தை இந்த நீதிமன்றம் மதிக்க வேண்டும். எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.
வெளிநாட்டு நீதிமன்றம் குறித்து இங்கு பேச அனுமதி வழங்க முடியாது. இந்த விவகாரத்தில் அரசு தான் முடிவு எடுக்க முடியும். எனவே, மனு நிராகரிக்கப் படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.