ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்கள்; மீட்டு வர மத்திய அரசு தீவிரம்
ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்கள்; மீட்டு வர மத்திய அரசு தீவிரம்
UPDATED : ஜன 15, 2026 05:11 PM
ADDED : ஜன 15, 2026 05:07 PM

புதுடில்லி: உள்நாட்டுக் கலவரம் நடந்து வரும் ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. முதல் குழுவினர், நாளை மீட்டு வரப்படுவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் விலைவாசி எதிரான போராட்டங்கள், அயதுல்லா கமேனி ஆட்சிக்கு எதிராக திரும்பியுள்ளன. நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்தும் போர்க்களம் போல காட்சி அளிக்கின்றன.
அரசுக்கு எதிராக போராடும் அனைவரையும் அமெரிக்காவும், இஸ்ரேலும் துாண்டி விடுவதாக கூறி, ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட நடவடிக்கைகளால் இதுவரை 3428 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
இதனால் அந்நாட்டில் படிப்பதற்கும், புனித யாத்திரைக்காகவும், வர்த்தகம் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் சென்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள், தப்பிக்க வழியின்றி அங்கு சிக்கியுள்ளனர்.
அவர்களை மீட்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அனைத்து ஏற்பாடுகளும் சரியாக நடக்கும் பட்சத்தில், அங்கு சிக்கியுள்ளவர்களில் முதல் குழுவினர், நாளை இந்தியா அழைத்து வரப்படுவர் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

