அமெரிக்காவில் மாயமான 4 இந்தியர்கள் சாலை விபத்தில் மரணம்
அமெரிக்காவில் மாயமான 4 இந்தியர்கள் சாலை விபத்தில் மரணம்
UPDATED : ஆக 03, 2025 03:28 PM
ADDED : ஆக 03, 2025 01:24 PM

வாஷிங்டன்: அமெரிக்காவில் மாயமான 4 இந்தியர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து பென்சில்வேனியாவிற்கு சென்ற இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த நான்கு மூத்த குடிமக்கள் காணாமல் போயுள்ளனர்.காணாமல் போனவர்கள் டாக்டர் கிஷோர் திவான்,89, ஆஷா திவான்,85, ஷைலேஷ் திவான்,86, மற்றும் கீதா திவான் 84 என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவர்கள் கடைசியாக ஜூலை 29ம் தேதி அன்று, பென்சில் வேனியாவில் உள்ள ஒரு உணவகத்துக்கு சென்றனர். அங்கு பதிவான சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய கிரெடிட் கார்டை வைத்தும் போலீசார் தேடி வந்தனர்.
உணவகம் அருகில் இருந்த இடத்தின் சுற்று வட்டார பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். அவர்கள் பயணித்த வாகனம் குறித்தும் தேசிய குற்றத்தடுப்பு தகவல் மையத்திற்கும் தெரிவிக்கப்பட்டது.
அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு 9:30 மணியளவில் அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் பயணித்த வாகனமும் பெருமளவு சேதம் அடைந்து இருந்தது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதன் பிறகு விரிவான அறிக்கை வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.