ஆப்பிள் நிறுவன உயர் பதவியில் இந்தியர் கெவன் பரேக்!
ஆப்பிள் நிறுவன உயர் பதவியில் இந்தியர் கெவன் பரேக்!
ADDED : ஆக 27, 2024 01:43 PM

புதுடில்லி: ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த, கெவன் பரேக், தலைமை நிதி அதிகாரியாக (சி.எப்.ஓ.,) பொறுப்பேற்க உள்ளார்.
உலகின் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதிலும், புதுப்புது மாடல்களை அறிமுகம் செய்வதிலும் ஆப்பிள் நிறுவனம் முன்னணியில் உள்ளது. லட்சக்கணக்கில் விலை இருந்தாலும், பெருமைக்காகவே வாடிக்கையாளர்கள் ஐபோன்களை விரும்பி வாங்கும் நிலை உள்ளது. இந்நிறுவனத்தின் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் வகை போன்கள் வரும் செப்டம்பர் மாதம் அறிமுகம் ஆகிறது.
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம், தனது தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கெவன் பரேக் என்பவரை நியமித்துள்ளது. இதன் மூலம் ஆப்பிளின் உயர்மட்ட பதவியில் இந்தியர் ஒருவர் நுழைந்துள்ளார். இவர் தலைமை நிதி அதிகாரியாக வரும் ஜனவரி 1ம் தேதி, 2025ம் ஆண்டு முதல் துவங்க உள்ளார்.
யார் இந்த கெவன் பரேக்
* இந்திய வம்சாவளியை சேர்ந்த, கெவன் பரேக், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் (Electrical Engineering) பிரிவில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.
* உலக புகழ்பெற்ற சிகாகோ பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., பட்டம் பெற்றுள்ளார் கெவின். இவருக்கு வயது 52. 11 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். நிதியியல் குழுவில் திறமையாக செயல்பட்டு எண்ணி 11 ஆண்டுகளில் வளர்ச்சி கண்டுள்ளார்.
* ஆப்பிள் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு, தாம்சன் ராய்ட்டர்ஸ் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களில் பல்வேறு உயர்பதவிகளில் பணிபுரிந்துள்ளார்.
* தற்போது, கெவன் பரேக் ஆப்பிள் நிறுவனத்தில் நிதி திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வின் துணை தலைவராக பணியாற்றி வருகிறார்.

