டி-20 உலக கோப்பை வென்ற இந்திய வீரர்கள் இன்று மோடியுடன் சந்திப்பு
டி-20 உலக கோப்பை வென்ற இந்திய வீரர்கள் இன்று மோடியுடன் சந்திப்பு
ADDED : ஜூலை 04, 2024 02:11 AM

மும்பை: உலக கோப்பை வென்ற இந்திய அணியினர் இன்று டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெறுகின்றனர். பின்னர் மும்பையில் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலம் செல்ல உள்ளனர். வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடக்க உள்ளது.
வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடந்தது. பைனலில் (பார்படாஸ்) 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய இந்திய அணி, உலக கோப்பை வென்றது. இந்த மகிழ்ச்சியில் இருந்த இந்திய வீரர்கள், பார்படாசில் ஏற்பட்ட 'பெரில்' புயல் காரணமாக, 3 நாள் ஓட்டலில் முடங்கினர்.
இதனால் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் இந்திய வீரர்களை அழைத்துவர, தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
வானிலை சரியான நிலையில், நேற்று காலை 11:30 மணிக்கு (இந்திய நேரப்படி) விமானம் பார்படாஸ் சென்றது. 16 மணி நேர பயணத்துக்குப் பின் இன்று காலை டில்லி விமான நிலையம் வருகின்றனர்.
பிரதமருடன் சந்திப்பு
பிரதமர் மோடியை, இன்று காலை 11:00 மணிக்கு, அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளனர். அப்போது உலக கோப்பையை வழங்கி, வாழ்த்து பெறவுள்ளனர். மதியம் இந்திய வீரர்கள் மும்பை செல்கின்றனர். மாலையில் மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை, இந்திய வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக ('ரோடு ஷோ') செல்ல உள்ளனர். இரவில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடக்கும். பின் பி.சி.சி.ஐ., சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.