ADDED : ஜூலை 30, 2025 06:06 AM

புதுடில்லி : எழுத்தாளர் கிரண் தேசாயின், 'தி லோன்லினஸ் ஆப் சோனியா அண்டு சன்னி' என்ற நாவல், இலக்கிய உலகின் மிக உயரிய புக்கர் பரிசின் முதற்கட்ட பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
இந்திய - அமெரிக்க எழுத்தாளர் கிரண் தேசாய் இதுவரை மூன்று நாவல்களை எழுதியுள்ளார். 2006ல் வெளியான, 'தி இன்ஹெரிடன்ஸ் ஆப் லாஸ்' என்ற இவரது இரண்டாவது நாவல் அப்போது புக்கர் பரிசை வென்றது.
அதன் பின், 19 ஆண்டுகள் கழித்து வரும் செப்டம்பரில், 'தி லோன்லினஸ் ஆப் சோனியா அண்டு சன்னி' என்ற தன் மூன்றாவது நாவலை விற்பனைக்கு கொண்டு வருகிறார்.
இந்த நாவல் புக்கர் பரிசுக்கான நீண்ட பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இது இந்த பரிசுக்கான முதற்கட்ட பட்டியலாக அறியப்படுகிறது.
இந்த நாவலுடன் மேலும் 12 நாவல்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இவற்றிலிருந்து ஆறு நாவல்கள் குறுகிய பட்டியலுக்கு தேர்வு செய்யப்படும். அதில் இருந்து ஒரு நாவலுக்கு புக்கர் பரிசு வழங்கப்படும்.
இந்த பரிசு பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையாக 58 லட்சம் ரூபாய் வழங்கப்படும். நவம்பர் 10ல் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் நடக்கும் நிகழ்ச்சியில், இந்த பரிசு யாருக்கு என்பது அறிவிக்கப்பட உள்ளது.