சீனாவுக்கு விமானத்தில் செல்லும் இந்தியர்கள் கவனம்: மத்திய அரசு அறிவுறுத்தல்
சீனாவுக்கு விமானத்தில் செல்லும் இந்தியர்கள் கவனம்: மத்திய அரசு அறிவுறுத்தல்
ADDED : டிச 08, 2025 07:35 PM

புதுடில்லி: சீனாவுக்கு விமானப் பயணம் செல்லும் போது இந்தியர்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
டில்லியில் மத்திய வெளியறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அளித்த பேட்டி;
ஷாங்காய் விமான நிலையத்தில் சமீபத்தில் நடந்த சம்பவத்தை (அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக் ஷாங்காய் விமான நிலையத்தில் அண்மையில் தடுத்து வைக்கப்பட்டார். அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி. எனவே அவரது இந்திய பாஸ்போர்ட்டை செல்லாது என கூறி சீன அதிகாரிகள் கைது செய்தனர்) தொடர்ந்து, சீன விமான நிலையங்கள் வழியாக பயணிக்கும் இந்தியர்கள் குறி வைக்கப்பட மாட்டார்கள்.
அவர்கள் தன்னிச்சையாக தடுத்தும் வைக்கப்பட மாட்டார்கள், துன்புறுத்தப்பட மாட்டார்கள். சர்வதேச விமான பயண விதிமுறைகளை மதிப்பதாக சீன அதிகாரிகள் உத்தரவாதம் அளிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
சீனாவுக்குப் பயணம் செய்யும் போதோ அல்லது அந்நாட்டின் வழியாக பயணிக்கும் போதோ இந்தியர்கள் உரிய விவேகத்துடன் செயல்படுமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தும்.
பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்துவதோடு, அதற்கான சட்ட விரோத நிதிகள், நாடு கடந்த குற்ற வலைப் பின்னல்களைத் தடுக்க இந்தியா உதவும். பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்க இங்கிலாந்து அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கிறோம்.
இத்தகைய பயங்கரவாதம், இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளன. பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் இங்கிலாந்துடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவோம்.
பாகிஸ்தானில் நிலவும் ஒவ்வொரு அசைவையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஜனநாயகத்தை பொறுத்தவரை, பாகிஸ்தானில் அது பலவீனமடைந்து வருவதாக கூறுகிறீர்கள். ஜனநாயகமும், பாகிஸ்தானும் ஒன்றாக இணைந்திருக்கவே முடியாது. இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

