பிரிட்டன் செல்லும் இந்தியர்களுக்கு இனி கூடுதல் சம்பளம் கிடைக்கும்
பிரிட்டன் செல்லும் இந்தியர்களுக்கு இனி கூடுதல் சம்பளம் கிடைக்கும்
ADDED : பிப் 12, 2026 09:17 AM

புதுடில்லி: இந்தியா - பிரிட்டன் இடையே மிக முக்கியமான சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் குறுகிய கால பணிக்காக பிரிட்டன் செல்லும் ஊழியர்களின் சம்பளத்தில், இனி இருமுறை சமூக பாதுகாப்புக்கான பிடித்தம் இருக்காது.
டில்லி வந்த பிரிட்டன் துாதர் லிண்டி கேம்ரூன், நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்தார்.
அப்போது இரு நாடுகளுக்கு இடையே சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் மூலம் மூன்று ஆண்டுகால குறுகிய கால பணிக்காக பிரிட்டன் செல்லும் ஊழியர்கள், இனி இரு நாடுகளிலும் சமூக பாதுகாப்புக்காக சம்பளத்தில் இருந்து தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
அதாவது பி.எப்., போன்ற சமூக பாதுகாப்புக்கு சம்பளத்தில் இருந்து பிடித்தம் இருக்காது. இதனால், மூன்று ஆண்டு காலம் வரை குறுகிய கால பணிக்காக பிரிட்டன் செல்லும் ஊழியர்களுக்கு சம்பளம் மிச்சமாகும்.
குறிப்பாக, 'டாடா கன்சல்டன்சி, இன்போசிஸ்' போன்ற ஐ.டி., ஊழியர்கள், இன்ஜினியர்களுக்கு இந்த ஒப்பந்தம் சிறந்த பலனை அளிக்கும் என கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின்படி பலனை பெற விரும்பும் ஊழியர்கள், 'சர்டிபிகேட் ஆப் கவரேஜ்' எனப்படும் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு சான்றிதழை பெற வேண்டும்.
இந்த சான்றிதழ் பெறுவதன் மூலம் இனி இரு நாட்டிலும், ஊழியர் பி.எப்., தொகை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதாவது இந்திய ஊழியர், இந்தியாவில் மட்டும் பி.எப்., தொகை செலுத்தினால் போதும்.

