இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கவுரவ பதவி
இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கவுரவ பதவி
ADDED : அக் 22, 2025 02:17 PM

புதுடில்லி: ஈட்டி எறிதல் போட்டியில் அதிக தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.
டில்லியில் உள்ள சவுத் பிளாக்கில் நடந்த விழாவில், ஈட்டி எறிதல் போட்டியில் அதிக தங்க பதக்கங்களை வென்று குவித்த நீரஜ் சோப்ராவுக்கு இன்று இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது. இந்த, விழாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி கலந்து கொண்டனர்.
கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீரஜ் சோப்ரா ஜூனியர் கமிஷன்டு அதிகாரியாக இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். முன்னதாக, நீரஜ் சோப்ராவுக்கு பத்மஸ்ரீ, மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் விஷிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது.
2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளத்தில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் என்ற வரலாற்றைப் படைத்தார் நீரஜ் சோப்ரா. 2024ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும், 2023ம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்தார்.
இவர் ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு மற்றும் டயமண்ட் லீக் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார். இவர், ஈட்டி எறிதல் போட்டியில், 90.23 மீட்டர் (2025) எறிந்து இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனையை படைத்துள்ளார்.
ராஜ்நாத் சிங் பாராட்டு!
நீரஜ் சோப்ராவின் சாதனைகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.இது குறித்து ராஜ்நாத் சிங் கூறுகையில், 'வருங்கால சந்ததியினருக்கு நீரஜ் சோப்ரா ஒரு உத்வேகமாக இருக்கிறார்.
நீரஜ் சோப்ரா ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் தேசிய பெருமை ஆகியவற்றின் உயர்ந்த கொள்கைகளை உள்ளடக்கியவர். விளையாட்டு சகோதரத்துவம் மற்றும் ஆயுதப்படைகளுக்குள் உள்ள தலைமுறைகளுக்கு நீரஜ் சோப்ரா ஒரு உத்வேகமாக சேவை செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.