இந்தியாவின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதை; ரயில்வே துறையில் அடுத்த மைல்கல்
இந்தியாவின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதை; ரயில்வே துறையில் அடுத்த மைல்கல்
ADDED : ஏப் 17, 2025 07:21 AM

ரிஷிகேஷ்: உத்தரகண்டில் அமைக்கப்பட்டு வரும் நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதையின் இறுதிகட்ட பணிகளை ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.
மலை பிரதேசமான உத்தரகண்டின் ரிஷிகேஷ் மற்றும் கர்ணபிரயாக் இடையே ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 16 சுரங்கப்பாதைகள், 12 துணை சுரங்கங்கள் என மொத்தம் 213 கி.மீ., தொலைவுக்கு ரயில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகின்றன. அதில், 195 கி.மீ., தொலைவிலான பணிகள் நிறைவு பெற்று விட்டன.
இந்த நிலையில், இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தேவ் பிரயாகை மற்றும் ஜனாசு இடையே மலையை குடைந்து சுமார் 14.58 கி.மீ., தொலைவு ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இது இந்திய ரயில்வே துறையின் புதிய மைல் கல் திட்டமாகும்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் தற்போதுள்ள ரயில் மற்றும் சாலை சுரங்கப்பாதைகளை பின்னுக்கு தள்ளி, நாட்டின் மிக நீளமான போக்குவரத்து சுரங்கப்பாதையாக இது மாறியுள்ளது. இந்த சுரங்கப்பாதை ஓரிரு ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த சுரங்கப்பாதையின் இறுதிகட்ட பணிகளை, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
இந்த சுரங்கப்பாதையின் மூலம் உத்தரகண்ட்டின் மலை மாவட்டங்களுக்கு செல்லும் பயண நேரம் வெகுவாக குறையும். ஆன்மிக தலங்கள், சுற்றுலா மற்றும் உள்ளூர் மக்களின் தொழில் வளர்ச்சிக்கு இந்த ரயில் சுங்கப்பாதை மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.