இந்தியாவின் கடல்சார் துறை வேகமாக முன்னேறி வருகிறது; பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியாவின் கடல்சார் துறை வேகமாக முன்னேறி வருகிறது; பிரதமர் மோடி பெருமிதம்
ADDED : அக் 29, 2025 06:33 PM

மும்பை: இந்தியாவின் கடல்சார் துறை மிக வேகமாக முன்னேறி வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
மும்பையில் நடந்து வரும் இந்திய கடல்சார் வார விழாவில், பிரதமர் மோடி பேசியதாவது: இன்று, இந்தியாவின் துறைமுகங்கள் வளரும் நாடுகளில் மிகவும் திறமையானவையாகக் கருதப்படுகின்றன. பல அம்சங்களில், அவை வளர்ந்த நாடுகளை விட சிறப்பாகச் செயல்படுகின்றன. இந்தியாவின் கடல்சார் துறை மிக வேகமாக முன்னேறி வருகிறது. நூற்றாண்டுகளுக்கும் மேலான காலனித்துவ கப்பல் சட்டங்களை 21ம் நூற்றாண்டுக்கு ஏற்ற நவீன மற்றும் எதிர்கால சட்டங்களால் மாற்றியமைத்துள்ளோம்.
புதிய சட்டங்கள் மாநில கடல்சார் வாரியங்களின் பங்கை வலுப்படுத்துகின்றன. துறைமுக நிர்வாகத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கின்றன. இந்திய கடல்சார் வார விழா ஒரு உலகளாவிய நிகழ்வாக மாறியுள்ளது. 2016ல், இந்த மாநாடு தொடங்கப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்க இன்று 85 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் இங்கு வந்துள்ளனர்.
பல கப்பல் கட்டும் திட்டங்கள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன. இது இந்திய கடல்சார் துறையின் வள்ர்ச்சி மற்றும் திறமையை பிரதிபலிக்கிறது. கடல்சார் துறை இந்தியாவின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில், இது கணிசமாக மாறியுள்ளது. வர்த்தகம் மற்றும் துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கப்பல் கட்டுமானத்தில் புதிய உயரங்களை எட்டுவதற்கான முயற்சிகளை இந்தியா துரிதப்படுத்துகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

