விமானத்தில் ஏசி இயங்காததால் பயணிகள் அவதி: மன்னிப்பு கோரியது இண்டிகோ
விமானத்தில் ஏசி இயங்காததால் பயணிகள் அவதி: மன்னிப்பு கோரியது இண்டிகோ
ADDED : செப் 07, 2024 04:21 PM

புதுடில்லி: டில்லியில் இருந்து வாரணாசி வந்த இண்டிகோ விமானத்தில் ஏசி செயல்படாததால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கோரியது.
விமானத்தில் பயணிக்க அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், அது சொகுசு ஆனதாக இருக்கும் என பலரும் எண்ணிக் கொண்டு உள்ளனர். ஆனால், சில நேரங்களில் அப்படி அமைவது கிடையாது.
அதில், ஒன்றாக, கடந்த 5ம் தேதி தேசியத் தலைநகர் டில்லியில் இருந்து உ.பி.,யின் வாரணாசிக்கு இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சென்றது. நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏசி செயல்படவில்லை. ஊழியர்களால் அதனை சரி செய்ய முடியவில்லை. இதனால் பயணிகள் வியர்த்து கொட்டியதால் கடும் அவதிக்குள்ளாகினர். சிலர் கைகளில் இருந்த புத்தகங்களை வைத்து விசிறி கொண்டனர். ஒருவர் ஏசியை சரி செய்ய முயன்றும் அது பலனளிக்கவில்லை. இதனால், ஊழியர்களுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விமானத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அவதியை, பயணிகள் 'எக்ஸ் ' சமூக வலைதளத்தில் பதிவிட துவங்கினர். கருத்துகளாகவும், புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் வெளியிட்டனர். இதனையடுத்து இண்டிகோ நிறுவனம், பயணிகளிடம் மன்னிப்பு கோரி உள்ளது.

