இந்திரா உணவகங்கள் டிஜிட்டல் மயம்? பெங்களூரு மாநகராட்சி ஆலோசனை!
இந்திரா உணவகங்கள் டிஜிட்டல் மயம்? பெங்களூரு மாநகராட்சி ஆலோசனை!
ADDED : ஆக 08, 2024 06:08 AM

பெங்களூரு: ஏழைகள், கூலி தொழிலாளர்களின் பசியை போக்கும் இந்திரா உணவகங்களை, டிஜிட்டல் மயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
சித்தராமையா முதன் முறையாக, முதல்வரான போது, 2016ல் இந்திரா உணவகம் திட்டத்தை செயல்படுத்தினார். முதற் கட்டமாக பெங்களூரில் உணவகங்கள் திறக்கப்பட்டன. இட வசதி இல்லாத வார்டுகளில், மொபைல் உணவகங்கள் திறக்கப்பட்டன. அதன்பின் பல்வேறு நகரங்களுக்கு, திட்டம் விஸ்தரிக்கப்பட்டது.
கடந்த 2018ல் கூட்டணி அரசு, அதன்பின் வந்த பா.ஜ., அரசு இந்திரா உணவகங்களுக்கு நிதியுதவி வழங்கவில்லை.
இதனால் உணவகங்கள் மூடும் நிலைக்கு வந்தன. 2023ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், இந்திரா உணவகங்களுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டது. கூடுதல் உணவகங்கள் திறக்கவும் நடவடிக்கை எடுத்தது.
பெங்களூரின், இந்திரா உணவகங்களுக்கு உணவு சப்ளை செய்யும் செப்டாக் நிறுவனம் மீது, பல புகார்கள் வந்ததால், அந்நிறுவனத்துடனான டெண்டரை ரத்து செய்து, ரிவார்டு நிறுவனத்துக்கு டெண்டர் அளிக்கப்பட்டது.
இந்த நிறுவனம் உணவு மெனுவை மாற்ற திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட் 15க்கு பின், இந்திரா உணவகங்களில் சப்பாத்தி, கேழ்வரகு களி, காபி, டீ என, பல விதமான உணவுகள் கிடைக்கும்.
இதற்கிடையே இந்திரா உணவகங்களில், ஹோட்டல், ரெஸ்டாரென்டுகள் போன்று, பொது மக்களிடம் ஆர்டர்கள் பெற்று, உணவு சப்ளை செய்ய அரசு ஆலோசிக்கிறது.
மாநில அரசின் ஆலோசனைக்கு பொது மக்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். 'பெங்களூரில் 169 இந்திரா உணவகங்கள் செயல்படுவதாக, மாநகராட்சி கூறுகிறது.
ஆனால் உண்மை வேறு. நாகரபாவி, பன்னரகட்டா ரோடு, மாகடி ரோடு, ஜெயநகர் ஏழாவது பிளாக் உட்பட, பல்வேறு இடங்களில் உணவகங்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.
'இந்திரா உணவகங்களில், உணவகம் இருக்கும் இடம், உணவின் தரம், துாய்மை என, பல பிரச்னைகள் உள்ளன. இவற்றை சரி செய்வதற்கு பதில், டிஜிட்டலாக்க தேவையில்லை' என பலரும் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
இந்திரா உணவகங்களை டிஜிட்டல் மயமாக்குவது குறித்து, விரைவில் டெண்டர் அழைக்கப்படும். சில உணவகங்கள் செயல்படவில்லை என, தகவல் வந்துள்ளது. இதற்கு ஊழியர் பற்றாக்குறை அல்லது உணவு பிரச்னை, காரணமாக இருக்கலாம்.
முதலில் மக்களின் கருத்துகள் என்ன என்பதை, தெரிந்து கொள்ள வேண்டும். இந்திரா உணவகங்களில் டிஜிட்டல் திரைகள் பொருத்தப்படும்.
தனியார் ஹோட்டல்கள், ரெஸ்டாரென்டுகளில் பொது மக்கள் ஆர்டர் செய்தால், உணவு சப்ளை செய்யப்படுகிறது.
இதே நடைமுறையை இந்திரா உணவகங்களில் செயல்படுத்த ஆலோசிக்கிறோம்.
பொது மக்கள் உணவு ஆர்டர் செய்தால், அதன் தகவல் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்படும். எந்தெந்த உணவகங்கள் செயல்படுகின்றன, எந்த இடத்தில் உணவக தேவை அதிகம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.