தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ஊடுருவல் பிரச்னையால் தேச ஒற்றுமைக்கு... அச்சுறுத்தல்!: ஆர்.எஸ்.எஸ்., விழாவில் பிரதமர் மோடி பேச்சு

ஊடுருவல் பிரச்னையால் தேச ஒற்றுமைக்கு... அச்சுறுத்தல்!: ஆர்.எஸ்.எஸ்., விழாவில் பிரதமர் மோடி பேச்சு

ஊடுருவல் பிரச்னையால் தேச ஒற்றுமைக்கு... அச்சுறுத்தல்!: ஆர்.எஸ்.எஸ்., விழாவில் பிரதமர் மோடி பேச்சு


ADDED : அக் 02, 2025 12:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2025 12:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பதுடில்லி:“தேசத்தின் சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கு, ஊடுருவல் பிரச்னை மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற சித்தாந்தத்தில் தான் தேசத்தின் ஆன்மா புதைந்து இருக்கிறது. இந்த சித்தாந்தம் உடைக்கப்பட்டால் தேசம் பலவீனமாகி விடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம், 1925ல் விஜயதசமி நன்னாளில் மஹாராஷ்டிராவின் நாக்பூரில் துவங்கப்பட்டது. இந்த இயக்கத்தை, டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் நிறுவினார்.

ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எஸ்., பிரசாரகராக இருந்து, அதன் ஹிந்துத்துவ சித்தாந்தத்துடன் துவங்கப்பட்ட பா.ஜ.,வுக்கு மாறியவர் தான், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி.

நம்பிக்கை

இந்த மாபெரும் இயக்கத்தின் நுாற்றாண்டு விழா, டில்லியில் நேற்று கொண்டாடப்பட்டது.

இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ்., வலுவாக போரிட்டது. தேசத்தின் மீது அன்பு செலுத்துவதையே ஆர்.எஸ்.எஸ்., பெரிதும் விரும்புகிறது. பொய் வழக்குகளை சுமத்தியபோதும், அந்த இயக்கம் ஒருபோதும் துவண்டு போனதில்லை.

ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை தடை செய்வதற்கு முயற்சிகள் நடந்தன. அவற்றை எல்லாம் அதன் தலைவர்கள் பொறுத்துக் கொண்டனர்.

ஒவ்வொரு ஸ்வயம் சேவகரும் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீது அசைக்க முடியாத ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அந்த நம்பிக்கை தான், 'எமர்ஜென்சி' காலத்திலும், இன்னல்களை எதிர்கொள்ள உத்வேகத்தையும், வலுவையும் அவர்களுக்கு கொடுத்தது.

'ஒரே இந்தியா; மகத்தான இந்தியா' என்ற கொள்கை மீது, ஆர்.எஸ்.எஸ்., ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கிறது.

இது, தீமையை எதிர்த்து உண்மையை நிலைநாட்டிய இயக்கம். நானும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை வேராக கொண்டவன் தான்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் தேசத்தின் ஆன்மா. ஜாதி, மொழி, பிரிவினைவாதம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணாவிட்டால், அவை தேசத்தின் ஆன்மாவை பலவீனமாக்கிவிடும்.

சவால்கள்

இன்றைய காலத்தில் நம் ஒற்றுமை, கலாசாரம் மற்றும் பாதுகாப்பு மீது நேரடியான தாக்குதல் நடத்தப்படுகின்றன. பிரிவினைவாத, பிராந்தியவாத சிந்தனை, ஜாதி, மொழி ரீதியிலான சண்டைகள் மற்றும் பிரிவினைகள் வெளியில் இருக்கும் தீய சக்திகளால் கட்டவிழ்க்கப்படுகின்றன.

ஊடுருவல் விவகாரம் நம் தேசத்தின் பாதுகாப்புக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்துலாக உருவெடுத்து இருக்கிறது. விழிப்புணர்வு, அர்ப்பணிப்பு ஆகியவற்றால், அந்த சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

பொருளாதாரத்திற்காக பிற நாடுகளை சார்ந்திருப்பது, நம் ஒற்றுமையை உடைப்பதற்கான மிகப்பெரிய சதி. அதற்கு நாம் பலியாகிவிடக் கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

பாரத மாதாவுக்கு ரூ.100 நாணயம் ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவையொட்டி, சிறப்பு 100 ரூபாய் நாணயம் மற்றும் அஞ்சல் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: சுதந்திர இந்தியா வரலாற்றில் முதல் முறையாக பாரத மாதா உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இது, மிகுந்த பெருமைக்குரிய விஷயம். இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில், தேசிய சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது. மறு பக்கத்தில் சிம்ம வாகனத்தில் வரத முத்திரையுடன் பாரத மாதா அமர்ந்திருக்கும் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தேச பற்றுடன், ஸ்வயம் சேவகர்கள் அவரை வணங்குவது போன்ற உருவங்களும் இடம் பெற்றிருப்பது சிறப்பானது. இவ்வாறு அவர் பேசினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us