மேற்கு வங்க கலவரத்திற்கு காரணம் யார்: ஆரம்ப கட்ட விசாரணையில் பகீர் தகவல்
மேற்கு வங்க கலவரத்திற்கு காரணம் யார்: ஆரம்ப கட்ட விசாரணையில் பகீர் தகவல்
ADDED : ஏப் 15, 2025 06:17 PM

புதுடில்லி; மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத்தில், வக்ப் சட்டத்திற்கு எதிராக நடந்த கலவரத்திற்கு, வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களே காரணம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேற்கு வங்க மவட்டத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ப் வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக சம்சர்கஞ்ச், துலியன், ஜாங்கிபூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில் தந்தை மகன் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ள நிலையில், கலவரம் நடந்த பகுதிகளில் ஹிந்துக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருவதாக கூறப்படுகிறது.
முர்ஷிதாபாத்தில் கலவரம் கட்டுக்குள் வந்த நிலையில், தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் நேற்று போராட்டம் வெடித்தது. இங்கு வக்ப் சட்டத்தை எதிர்த்து ஏராளமானோர் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டம் நடத்தியவர்களில் சிலர், போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில், போலீஸ் வாகனங்கள் சேதமாயின. சில இடங்களில் போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இங்கு பதற்றம் நிலவுகிறது.
இதனையடுத்து அங்கு எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 900 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்; மேலும் அம்மாநிலத்தில் உள்ள மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
இதனிடையே, மாநில டிஜிபி மற்றும் தலைமை செயலர் மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். பதற்ற மாநிலங்களில் கூடுதல் கண்காணிப்புடன் இருப்பதுடன், இயல்பு நிலை திரும்ப தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளார். தொடர்ந்து அவர்களுடன் உள்துறை செயலாளர் தொடர்பில் உள்ளார்.
இந்நிலையில், கலவரம் தொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடந்த கலவரத்திற்கு வங்கதேசத்தில் இருந்து ஊடுருவிய சமூக விரோதிகள் காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இவர்களுக்கு உள்ளூர் தலைவர்கள் பணம் கொடுத்ததும், பிறகு அவர்களாலேயே சமூக விரோதிகளை கட்டுப்படுத்த முடியாததும் தெரியவந்துள்ளது. இது குறித்து தொடர் விசாரணை நடந்துவருகிறது.