சபரிமலை தங்கம் மாயமான விவகாரத்தில் சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு?
சபரிமலை தங்கம் மாயமான விவகாரத்தில் சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு?
ADDED : டிச 08, 2025 03:54 AM

திருவனந்தபுரம்: கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில், சர்வதேச தொல்லியல் பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள எம்.எல்.ஏ.,வுமான ரமேஷ் சென்னிதலா, இதுகுறித்து விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு, கருவறை வாசலில் இருபுறமும் உள்ள துவாரபாலகர் சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள், 2019ல் கழற்றப்பட்டு செப்பனிடும் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கான செலவை கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி ஏற்றார்.
கைது பணிகள் முடிந்து கவசங்கள் ஒப்படைக்கப்பட்ட போது, அதில், 4 கிலோ தங்கம் மாயமானது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய கேரள உயர் நீதிமன்றம், தங்கம் மாயமானது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது.
பல கட்ட விசாரணைக்கு பின் இந்த விவகாரத்தில், உன்னிகிருஷ்ணன் போத்தி, கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் பத்மகுமார், நகைக் கடைக்காரர் கோவர்த்தன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில், சர்வதேச தொல்லியல் பொருட்கள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள எம்.எல்.ஏ.,வுமான ரமேஷ் சென்னிதலா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
சபரிமலை அய்யப்பன் கோவில் தங்கம் மாயமானது, வெறும் திருட்டு சம்பவம் அல்ல.
முக்கிய ஹிந்து கோவில்களில் இருந்து விலைமதிப்பற்ற பழங்காலப் பொருட்கள், சிலைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்து கடத்துவதற்கான பெரிய சதித்திட்டத்தை இது உள்ளடக்கியுள்ளது.
இந்த விவகாரத்தில், இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் முக்கிய குற்றவாளிகள் அல்ல. திரைக்கு பின்னால் மிகப்பெரிய சதி கும்பல் உள்ளது.
ரூ.500 கோடி
இதில், சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளது. அந்த கும்பலின் நடமாட்டம் அறிந்த நபர் ஒருவர், இது தொடர்பான தகவல்களை என்னிடம் கூறினார். அவர் கூறியது அனைத்தும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள்-; நம்பகமானவையும் கூட.
இந்த விவகாரத்தில், திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு தொடர்பிருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. தங்கம் மாயமான விவகாரத்தில், 500 கோடி ரூபாய் கைமாறி உள்ளது.
கேரள தொழிலதிபர்கள் உட்பட பலருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதும் உறுதியாகியுள்ளது.
தங்கக்கவசம் கொள்ளையடிக்கப்பட்டதில், சர்வதேச தொல்லியல் பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பிருப்பது குறித்த விபரங்களை அளிக்க தயாராக உள்ளேன்.
தேவைப்பட்டால், நீதிமன்றத்தில் சாட்சி சொல்லவும் தயாராக இருக்கிறேன்.
எனவே, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, திரைமறைவில் உள்ள சர்வதேச குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது-.

