இந்தியாவின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்யுங்கள்; பிரதமர் மோடி அழைப்பு
இந்தியாவின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்யுங்கள்; பிரதமர் மோடி அழைப்பு
UPDATED : ஜன 27, 2026 02:41 PM
ADDED : ஜன 27, 2026 02:39 PM

புதுடில்லி: இந்தியாவின் எரிசக்தி துறை 500 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 45 லட்சம் கோடி ரூபாய்) முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது. உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உலகளாவிய முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில், கோவாவில் இன்று 2026 இந்திய எரிசக்தி வார மாநாடு இன்று முதல் ஜனவரி 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: இந்திய - ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உற்பத்தி மற்றும் சேவைத் துறையை ஊக்குவிக்கும்.
இந்தியா விரைவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மையமாக உருவாகும். இந்தியா அனைத்து துறைகளிலும் தொடர்ச்சியாக பல்வேறு சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது. எரிசக்தித் துறையில் முதல் ஐந்து ஏற்றுமதியாளர்களில் இந்தியாவும் ஒன்று.
இந்தியாவின் எரிசக்தி துறை 500 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 45 லட்சம் கோடி ரூபாய்) முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது. உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வர வேண்டும். சமீபத்தில், இந்தியாவில் கப்பல் கட்டுவதற்காக 70,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு எரிசக்தித் துறையை இந்தியா உருவாக்கும் செயலில் ஈடுபட்டு இருக்கிறது. மலிவு விலையில் சுத்திகரிப்பு செய்து உலக நாடுகளுக்கான ஏற்றுமதியையும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

