பா.ஜ., புகாரில் விசாரணை: கெஜ்ரிவாலுக்கு 'நோட்டீஸ்'
பா.ஜ., புகாரில் விசாரணை: கெஜ்ரிவாலுக்கு 'நோட்டீஸ்'
ADDED : பிப் 04, 2024 01:31 AM

புதுடில்லி: பா.ஜ., மீது குற்றஞ்சாட்டிய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அக்கட்சி புகார் அளித்த நிலையில், ஐந்து மணி நேர காத்திருப்புக்கு பின், அவரிடம் போலீசார் நேற்று 'நோட்டீஸ்' அளித்தனர். இதில், இவ்விவகாரம் தொடர்பாக மூன்று நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது.
இங்கு, தன் அரசை கவிழ்க்க, பா.ஜ., சதி செய்வதாகவும், கட்சியில் இருந்து விலகினால், 25 கோடி ரூபாய் தருவதாக, தங்கள் கட்சியைச் சேர்ந்த ஏழு எம்.எல்.ஏ.,க்களிடம், பா.ஜ., பேரம் பேசியதாக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் குற்றஞ்சாட்டினார்.
இதற்கு, டில்லி பா.ஜ.,வினர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இதுதொடர்பாக பொய் புகாரை எழுப்பிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக டில்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலிடம் நோட்டீஸ் வழங்க நேற்று அவரது இல்லத்திற்கு டில்லி போலீசார் சென்றனர். முதலில் அவர் வீட்டில் இல்லை எனக்கூறி போலீசாரை திருப்பி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
எனினும், ஐந்து மணி நேர காத்திருப்புக்கு பின் போலீசார், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நோட்டீஸ் அளித்தனர். இதில், பா.ஜ., அளித்த புகாருக்கு மூன்று நாட்களுக்குள் உரிய பதிலை எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர, டில்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே ஐந்து முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. எனினும், இதுவரை ஒருமுறை கூட இவ்வழக்கின் விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து, அமலாக்கத்துறை தரப்பில் டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இவ்வழக்கு, வரும் 7ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.