உதயநிதி: கேலோ இந்தியா விளையாட்டுவிழா பிரதமருக்கு அழைப்பு: சோனியா உடன் மரியாதை நிமித்த சந்திப்பு
உதயநிதி: கேலோ இந்தியா விளையாட்டுவிழா பிரதமருக்கு அழைப்பு: சோனியா உடன் மரியாதை நிமித்த சந்திப்பு
UPDATED : ஜன 04, 2024 09:54 PM
ADDED : ஜன 04, 2024 05:38 PM

புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த அமைச்சர் உதயநிதி கேலோ இந்தியா விளையாட்டு துவக்க விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.தொடர்ந்து காங்., தலைவர்களில் ஒருவரான சோனியாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தாகவும் கூறினார்.
அரசின் திட்டத்தின் கீழ் 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் 17 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் 21 வயதிற்குட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
2021ல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் ஹரியானா மாநிலம், பஞ்சகுலாவிலும், 2022ல் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலிலும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ளன. வரும் ஜனவரி 19 முதல் 31ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், டில்லியில் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி சந்தித்தார். அப்போது, அவர் கேலோ இந்தியா விளையாட்டு துவக்க விழாவுக்கு அழைப்பிதழை, பிரதமரிடம் வழங்கினார்.
சோனியா, ராகுலுடன் சந்திப்பு
இதை தொடர்ந்து காங். மூத்த தலைவர் சோனியா, ராகுல் ஆகியோரையும் உதயநிதி சந்தித்து பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி மேற்கண்ட இருவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக கூறினார்.