ஈரான் போர் கப்பல் பணியாளர்கள்: கொச்சியில் இருந்து நாடு திரும்பினர்
ஈரான் போர் கப்பல் பணியாளர்கள்: கொச்சியில் இருந்து நாடு திரும்பினர்
ADDED : மார் 15, 2026 02:04 AM
புதுடில்லி: கேரளாவின் கொச்சியில் நிறுத்தப்பட்டுள்ள, ஈரானுக்கு சொந்தமான, 'ஐ.ஆர்.ஐ.எஸ்., லாவன்' போர்க்கப்பலில் இருந்த, 183 பணியாளர்களில், 100க்கும் மேற்பட்ட அத்தியாவசியமற்ற பணியாளர்களை, துருக்கி செல்லும் தனி விமானத்தில் மத்திய அரசு அனுப்பி வைத்தது.
மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் பதிலடி கொடுப்பதால் அப்பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.
கேரளாவின் கொச்சி கடற்கரையில், ஈரானின், ஐ.ஆர்.ஐ.எஸ்., லாவன் போர்க்கப்பல், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கடந்த 4 முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. இதில், 183 பணியாளர்கள் இருந்தனர்.
இந்நிலையில், கப்பலில் இருந்த, 100க்கும் மேற்பட்ட அத்தியாவசியமற்ற பணியாளர்கள், கொச்சியில் இருந்து துருக்கி விமானம் மூலம் மேற்காசிய நாடான ஆர்மீனியா தலைநகர் யெரெவன் நகருக்கு புறப்பட்டனர்.
அங்கிருந்து சாலை வழியாக ஈரானுக்கு செல்வர் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது, அத்தியாவசியப் பணியாளர்கள் மட்டும் கப்பலை பராமரிப்பதற்காக கொச்சியில் தங்கியுள்ளனர்.
இந்த தனி விமானம் கொச்சிக்கு வருவதற்கு முன், கடந்த 4-ல், இலங்கை கடற்கரை அருகே ஈரான் போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கியதில் உயிரிழந்த, 80க்கும் மேற்பட்ட ஈரானியர்களின் உடல்களை ஏற்றிக் கொண்டு வந்தது.
