வரையாடுகளின் வாழ்விடமாக மாறிய இரவிக்குளம் தேசிய பூங்கா
வரையாடுகளின் வாழ்விடமாக மாறிய இரவிக்குளம் தேசிய பூங்கா
UPDATED : செப் 14, 2025 01:21 AM
ADDED : செப் 14, 2025 01:13 AM

தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகள், வேறு எங்கும் இல்லாத வகையில், கேரள மாநிலம் இரவிக்குளம் தேசிய பூங்காவில், 841 இருப்பதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தில், யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இருப்பினும், வரையாடுகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு திட்டத்தை, 2022ல் தமிழக அரசு அறிவித்தது.
புதிய உயரம் கோவையில் இதற்கென தனி அலுவலகம் துவக்கப்பட்டு, வரையாடுகள் வாழ்விட பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் அடையாளமாக வரையாடுகள் அறிவிக்கப்பட்டாலும், வரையாடுகள் பாதுகாப்பில் கேரள வனத்துறை புதிய உயரத்தை அடைந்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இரவிக்குளம் பகுதி, 1975ல் வன உயிரின சரணாலயமாகவும், 1978ல் தேசிய பூங்காவாகவும் அறிவிக்கப் பட்டது.
தற்போது பொன்விழா ஆண்டில் உள்ளது. கேரளா வின் முதலாவது தேசிய பூங்கா என்பதுடன், வரையாடுகள் அதிகம் இருக்கும் இடமாகவும் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வரையாடுகள் பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, கேரள வனத்துறையுடன் தமிழக அரசு இணைந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக வரையாடுகள் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. தமிழகத்தில், வரையாடுகள் எண்ணிக்கை, தற்போது, 1,303 ஆக உள்ளது. கேரளாவில், 1,365 வரையாடுகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இதில், இரவிக்குளம் தேசிய பூங்காவில் மட்டும், 2024ல் 827 ஆக இருந்த வரையாடுகள் எண்ணிக்கை, இந்த ஆண்டு, 841 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒரே இடத்தில் அதிகபட்சமாக, 200 வரையாடுகள் வரை மட்டுமே இருக்கின்றன.
ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் வரையாடுகள் வாழ்வதற்கான காரணங்கள் குறித்து, வன உயிரியல் ஆர்வலர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
காரணம் என்ன? இதுகுறித்து, 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:
தமிழகத்தில் கிடைத்த அனுபவம் அடிப்படையில், வரையாடுகளை மிக தொலைவில் தான் பார்க்க முடியும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், கேரள மாநிலம் இரவிக்குளத்தில் மக்கள் நடமாடும் இடங்களுக்கு வரையாடுகள் தானாக வருகின்றன.
மக்கள் எவ்வித அச்சமும் இன்றி, வரையாடுகளை மிக நெருக்கமாக பார்ப்பதற்கான சூழல் அங்கு நிலவுகிறது. கேரள எல்லையில் உள்ள ராஜமலையில் காணப்படும் ஒருவகை புற்கள் தான், வரையாடுகள் அதிகம் இருக்க காரணமாக கூறப்படுகிறது.
குறிப்பாக, இங்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் புற்கள் தீயிட்டு எரிக்கப்படும். இதன்பின், பருவமழை துவங்கும் போது, புதிதாக செழிப்பான புற்கள் அதிகமாக வளரும்.
இதுவே, வரையாடுகள் இங்கு தொடர்ந்து முகாமிட காரணமாக பார்க்கப்படுகிறது.
பழங்குடியினர் தொடர்ந்து செய்து வந்த இந்த நடைமுறை தற்போதும் தொடர்வதால், இப்பகுதி வரையாடுகளின் நிரந்தர புகலிடமாக மாறியுள்ளது. ராஜமலையின் மறுபக்கத்தில், தமிழகத்தின், 'கிராஸ் ஹில்ஸ்' தேசிய பூங்கா அமைந்துள்ளது.
இரவிக்குளத்தில் இருந்து, 'கிராஸ் ஹில்ஸ்' பகுதிக்கு வரையாடுகள் கூட்டமாக வந்து செல்வது வழக்கம். எனவே, வரையாடுகளின் தேவை அறிந்து, அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக வனத்துறை திட்டமிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -