கும்பமேளாவுக்காக கூடார நகரம்: ஐ.ஆர்.சி.டி.சி., புதிய திட்டம்
கும்பமேளாவுக்காக கூடார நகரம்: ஐ.ஆர்.சி.டி.சி., புதிய திட்டம்
ADDED : நவ 22, 2024 04:57 AM

புதுடில்லி: உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரயாக்ராஜில், அடுத்தாண்டில் மகா கும்பமேளா நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போதே துவங்கிவிட்டன.
வரும் 2025 ஜன., 13 முதல் பிப்., 26 வரை நடக்க உள்ள இந்த கும்பமேளாவில், பல கோடி பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பிரயாக்ராஜில் பிரமாண்ட கூடார நகரத்தை அமைக்க உள்ளது, ரயில்வேயின் துணை நிறுவனமான, ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்.
இதுகுறித்து, அதன் தலைவர் சஞ்சய் குமார் ஜெயின் நேற்று வெளியிட்ட அறிக்கை: மகா கும்பமேளாவுக்கு வரும் யாத்ரீகர்களுக்கு தேவையான அனைத்து அதிநவீன வசதிகளுடன் கூடிய கூடார நகரை அமைக்க உள்ளோம். ஆன்மிக மற்றும் கலாசார அனுபவங்களை பெறும் வகையில் இவை அமைக்கப்படும். இதில், யாத்ரீகர்களுக்கு நட்சத்திர ஹோட்டலில் தங்கும் அனுபவம் கிடைக்கும்.
இங்கு தங்குவதற்காக, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும், ரயில் சுற்றுலா திட்டங்கள், பாரத் கவுரவ் ரயில்களுக்கு முன்பதிவு செய்யும்போது, இந்த கூடாரங்களில் தங்கவும் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.