கர்நாடக வனப்பகுதி கிராமங்களில் அசம்பாவிதம் தவிர்க்க இரும்பு கயிறு
கர்நாடக வனப்பகுதி கிராமங்களில் அசம்பாவிதம் தவிர்க்க இரும்பு கயிறு
ADDED : டிச 06, 2024 06:45 AM

பெங்களூரு: கர்நாடகாவின் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் ரயில் தண்டவாள பகுதியில் அசம்பாவிதத்தை தவிர்க்க இரும்பு கயிறு அமைப்பது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு, அதிகாரிகளுக்கு வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவிட்டுள்ளார்.
நஷ்டம்
கர்நாடகாவில் வனப்பகுதியை ஒட்டி, பல கிராமங்கள் உள்ளன. உணவு தேடி வரும் வன விலங்குகள், விவசாய விளைச்சல்களை சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
இது மட்டுமின்றி, சில இடங்களில் யானைகள் - மனிதர்கள் இடையே ஏற்படும் மோதல்களில் உயிரிழப்பு சம்பவங்களும் தொடர்கின்றன. குறிப்பாக, சிக்கமகளூரு, ஹாசன், சாம்ராஜ் நகர், மைசூரு, தட்சிண கன்னடா, குடகு, ராம்நகர் உட்பட பல பகுதிகளில் யானைகளின் தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
நடப்பாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை 25 யானைகளும்; 26 மனித உயிர்களும் பலியாகி உள்ளன. இதை தடுக்கும் வகையில், முதலில் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில், 312 கி.மீ., துாரத்துக்கு, இரும்பு ரயில்வே தண்டவாளத்தால் தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. இதில், 1 கி.மீ.,க்கு 1.50 கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது.
உணவு தேடி வரும் யானைகள், தடுப்பை தாண்டும் முயற்சியில், தண்டவாளத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன. இதை தடுக்க மாற்று முறைகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
ரூ. 45 லட்சம்
தமிழகத்தில் இதுபோன்ற வனப்பகுதியில், இரும்பு கயிறு கட்டப்பட்டு வருகிறது. 1 கி.மீ.,க்கு 45 லட்சம் ரூபாய் செலவழிக்கப்படுகிறது.
இதே திட்டத்தை கர்நாடகாவிலும் செயல்படுத்துவது குறித்து விரிவான திட்ட அறிக்கையை பத்து நாட்களுக்குள் சமர்ப்பிக்கும்படி, வனத்துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவிட்டுள்ளார்.
தமிழக வனப்பகுதி எல்லையில் போடப்பட்ட இரும்பு கயிற்றை, அகற்ற முயற்சித்த யானைகள். - கோப்பு படம்.