பெங்களூரு குண்டுவெடிப்பின் பின்னணியில் ஐ.எஸ்., அமைப்பு?
பெங்களூரு குண்டுவெடிப்பின் பின்னணியில் ஐ.எஸ்., அமைப்பு?
ADDED : மார் 04, 2024 07:14 AM

பெங்களூரு: பெங்களூரு 'ராமேஸ்வரம் கபே' குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் சிரியா நாட்டில் இயங்கி வரும் ஐ.எஸ்., அமைப்பு இருக்கலாம் என, சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பெங்களூரு, மாரத்தஹள்ளி அடுத்த ப்ரூக்பீல்டில், 'ராமேஸ்வரம் கபே' உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் கடந்த 1ம் தேதி மதியம் 12:55 மணிக்கு குண்டுவெடித்தது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து சி.சி.பி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர், தலையில் வெள்ளை தொப்பி அணிந்தபடியும், முகத்தை முக கவசத்தால் மறைத்தபடியும் தப்பிச் செல்லும் காட்சிகள், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. ஆனால் அந்த நபரின் முகம் தெளிவாக தெரியவில்லை.
பொட்டாசியம் நைட்ரேட்
காலை 11:30 மணிக்கு உணவகத்திற்கு வந்தவர், 11:50 மணிக்கு அங்கிருந்து வெளியேறி உள்ளார். அவர் சென்ற ஒரு மணி நேரம் 5 நிமிடங்கள் கழித்து, குண்டுவெடித்துள்ளது. தப்பிச் சென்றபோது, கையில் அணிந்திருந்த வாட்சில் அடிக்கடி மணியை பார்த்தபடி இருந்த காட்சிகளும், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.
இதனால் குண்டை வெடிக்க வைக்க, சரியான நேரத்தை 'பிக்ஸ்' செய்துவிட்டு சென்றதாக கருதப்படுகிறது. வெடிகுண்டுக்கு பயன்படுத்தப்பட்ட துகள்களை, தடயவியல் நிபுணர்கள் ஆய்வுக்கு எடுத்துச் சென்று, பரிசோதனை செய்ததில், பொட்டாசியம் நைட்ரேட் கலந்து தயாரித்ததும் தெரிய வந்துள்ளது.
உணவகத்திற்கு வந்தபோது, ஒரு கிலோ மீட்டர் துாரம் நடந்து வந்துள்ளார். ஆனால் உணவகத்தில் இருந்து வெளியே சென்ற பின்னர், வெறும் 100 மீட்டர் துாரம் தான் நடந்துள்ளார். பஸ்சில் ஏறி தப்பிச் சென்றாரா, வேறு யாராவது அவரை வாகனத்தில் அழைத்துச் சென்றனரா என்பதில், இன்னும் மர்மம் நிலவுகிறது.
குண்டுவெடிப்பு நிகழ்த்தியவர் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டைய மாநிலங்களுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று, போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் கர்நாடகா போலீசார், அந்த மாநில போலீசாருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.
இதற்கிடையில், 2014ல் பெங்களூரு சர்ச் தெரு, 2022ல் மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களை நிகழ்த்தியது, தலா ஒரேயொரு நபர் தான். அதேபோல் 'ராமேஸ்வரம் கபே' குண்டுவெடிப்பை நிகழ்த்தியதும் ஒரேயொரு நபர் தான். மூன்று குண்டுவெடிப்பு சம்பவங்களும் கிட்டத்தட்ட, ஒரே மாதிரியாக தான் நிகழ்த்தப்பட்டுள்ளதாக அவர்கள் கணித்துள்ளனர்.
அந்த வகையில் சர்ச் தெரு, மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு, சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்., அமைப்பு பொறுப்பு ஏற்றது. ஆனால், 'ராமேஸ்வரம் கபே' குண்டுவெடிப்புக்கு, இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
உணவகத்தில் சோதனை
இந்தத் தாக்குதலையும் ஐ.எஸ்., அமைப்பு நிகழ்த்தியிருக்கலாம் என்று சி.சி.பி., போலீசார் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
குண்டுவெடிப்பு தொடர்பாக, பெங்களூரு போலீஸ் கமிஷனர், எட்டு மண்டல துணை போலீஸ் கமிஷனர்களுடன், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர், ''குண்டுவெடிப்பு தொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் இருந்து, முழு தகவலையும் பெற்று உள்ளேன். குண்டுவெடிப்பு நிகழ்த்தியவர் பற்றி தடயம் கிடைத்து உள்ளது. கூடிய விரைவில் அவர் கைது செய்யப்படுவார்,'' என்றார்.
இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட நான்கு பேரையும், சி.சி.பி., போலீசார், ஆடுகோடிக்கு அழைத்துச் சென்றனர். தனி இடத்தில் வைத்து, துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாச கவுடா, லட்சுமி பிரசாத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
நேற்று மாலை குண்டுவெடித்த உணவகத்திற்குச் சென்று, சி.சி.பி., போலீசார் சோதனை நடத்தினர். குண்டுவெடித்தபோது பணியில் இருந்த, ஊழியர்களிடம் விசாரித்தனர்.

