ம.பி., அரசு மருத்துவ ஆய்வக ஒப்பந்தத்தில் ரூ.400 கோடி ஊழல்?
ம.பி., அரசு மருத்துவ ஆய்வக ஒப்பந்தத்தில் ரூ.400 கோடி ஊழல்?
ADDED : செப் 07, 2025 03:07 AM

போபால் : மத்திய பிரதேசத்தில், அரசு மருத்துவமனை ஆய்வகங்களை தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் விட்டதில், 400 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதாகவும், இதனால், நோயாளிகளுக்கு வழங்கப்படும் பரிசோதனை முடிவுகள் நம்பகமாக இல்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள ஜே.பி., மாவட்ட அரசு மருத்துவமனைக்கு, காய்ச்சல் காரணமாக தன் 6 வயது மகனை தாய் ஒருவர் சமீபத்தில் அழைத்துச் சென்றார். குழந்தைக்கு மலேரியா பரிசோதனை செய்ய டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.
போராட்டம்
அரசு மருத்துவமனையின் ஆய்வகத்தில் பரிசோதனைக்கு ரத்த மாதிரிகளை சேகரித்தனர். ஆய்வு முடிவில் மலேரியா இல்லை என வந்துள்ளது. இதையடுத்து, சாதாரண மாத்திரைகள் தந்து குழந்தையை டாக்டர்கள் வீட்டுக்கு அனுப்பினர்.
ஆனாலும், குழந்தைக்கு காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்துள்ளனர். அங்கு, மலேரியா இருப்பது உறுதியானது. அரசு ஆய்வகம் தந்த தவறான பரிசோதனை முடிவால், குழந்தை பல நாட்கள் கடும் காய்ச்சலில் அவதிப்பட்டது.
இதனால், அரசு மருத்துவமனை ஆய்வக நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்று தொடர்ந்து தவறு நடப்பதாக நோயாளிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குழப்பம்
இதுகுறித்து போபாலைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
மத்திய பிரதேசத்தில், அரசு மருத்துவமனைகளில் உள்ள 85 ஆய்வகங்களை நடத்தும் ஒப்பந்தத்தை, 'சயின்ஸ் ஹவுஸ் மெடிகோஸ்' மற்றும் பி.ஓ.சி.டி., ஆகிய இரு தனியார் நிறுவனங்கள் பெற்றுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு, 500 கோடி ரூபாய்.
ஆனால், இதில் வெறும் 60 முதல் 70 கோடி ரூபாயை மட்டுமே ஆய்வக கருவிகளுக்கு, இயந்திரங்களுக்கு செலவிட்டுள்ளனர். அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து துறை அங்கீகரித்த கருவிகளை மட்டுமே வாங்க ஒப்பந்தத்தில் அறிவுறுத்தல் உள்ளது. ஆனால் அதை கடைப்பிடிக்கவில்லை.
இதன் காரணமாக இந்நிறுவனங்களின் கீழ் இயங்கும் எந்த அரசு ஆய்வகமும், என்.ஏ.பி.எல்., எனப்படும் ஆய்வகத்தின் தரத்துக்கான உயர்நிலை சான்றை பெறவில்லை.
'சயின்ஸ் ஹவுஸ் மெடிகோஸ்' நிறுவனத்தின் தலைவர் ஊழல் குற்றச்சாட்டில் ஏற்கனவே சிறை சென்றவர். பி.ஓ.சி.டி., நிறுவனம் பல மாநிலங்களில், தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் உள்ளது. ஆனால், இந்த நிறுவனங்களுக்கு தான் இங்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் நிர்வகிக்கும் ஆய்வகங்களில் நாளொன்றுக்கு, 40,000 பரிசோதனைகள் நடப்பதாக கூறுகின்றனர். அவற்றில் பெரும்பாலானவை குழப்பமான முடிவுகளையே அளிக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.