ADDED : பிப் 05, 2024 11:53 PM

ஜுனாகத்: வெறுப்பு பேச்சு வழக்கில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகர் முப்தி சல்மான் அசாரி, குஜராத் பயங்கரவாத தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
குஜராத்தின் ஜுனாகத் நகரில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் இஸ்லாமியர்களின் பொதுக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. 'பி டிவிஷன்' போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே இந்த கூட்டம் நடந்தது.
இதில், மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த மத போதகர் முப்தி சல்மான் அசாரி பங்கேற்றார். அப்போது அவர் ஹிந்து மதத்துக்கு எதிராக கருத்துகளை கூறினார். அவரின் வெறுப்பு பேச்சு குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின.
இதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முஹமது யூசுப் மலேக், அசிம் ஹபிப் ஒதேதரா, மத போதகர் முப்தி சல்மான் அசாரி ஆகியோர் மீது பல்வேறு சமூகங்களுக்கு இடையே பகையை வளர்த்தல் உள்ளிட்ட பிரிவுகளில் குஜராத் பயங்கரவாத தடுப்புப் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து, முஹமது யூசுப், அசிம் ஹபிப் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், முப்தி சல்மான் அசாரை போலீசார் தேடி வந்தனர். அவர் மும்பையில் இருப்பதை அறிந்த போலீசார், நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். அப்போது முப்தி சல்மானின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் மும்பை கட்கோபர் போலீஸ் ஸ்டேஷன் முன் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, போலீசாரின் முயற்சியால் அவர்கள் கலைந்து சென்றனர்.
பின் பலத்த பாதுகாப்புடன் அவரை ஜுனாகத் அழைத்து வந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

