எல்-1 புள்ளியை அடைந்தது 'ஆதித்யா-எல்1' விண்கலம்: மைல் கல்லை எட்டியது இந்தியா; பிரதமர் மோடி பாராட்டு
எல்-1 புள்ளியை அடைந்தது 'ஆதித்யா-எல்1' விண்கலம்: மைல் கல்லை எட்டியது இந்தியா; பிரதமர் மோடி பாராட்டு
UPDATED : ஜன 06, 2024 05:02 PM
ADDED : ஜன 06, 2024 04:27 PM

பெங்களூரு: ஆதித்யா எல்-1 விண்கலம் இன்று(ஜன.,06) மாலை 4.11 மணிக்கு எல்-1 புள்ளியை அடைந்தது என பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஆதித்யா எல்-1 விண்கலத்தின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சூரியனை ஆய்வு செய்ய, கடந்த செப்., 2ல், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை, இஸ்ரோ விண்ணில் ஏவியது. பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ., துாரம், 125 நாட்கள் பயணித்து, சூரியனுக்கு அருகில் உள்ள, எல் 1 எனப்படும், லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.
எல்.புள்ளியில் நிலைநிறுத்தம்
இந்நிலையில் இன்று(ஜன.,06) 127 நாட்களுக்கு பின், எல்-1 புள்ளியை ஆதித்யா எல்-1 விண்கலம் அடைந்தது என பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மைல் கல்லை எட்டியது இந்தியா
மேலும் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: மனிதகுலத்துக்கு பலனளிக்கும் புதிய அறிவியல் எல்லைகளை அடைவதற்கு இந்தியா தொடர்ந்து பணியாற்றும். விஞ்ஞானிகள் அற்பணிப்புடன் பணியாற்றியதற்கான சான்று இது. புதிய மைல் கல்லை எட்டியது இந்தியா. இந்த அசாதாரண சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து பாராட்டுகிறேன். இவ்வாறு இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியிருப்பதாவது: சூரியனின் செயல்பாடுகளையும், வானிலையில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் ஆதித்யா எல்-1 விண்கலம் ஆய்வு செய்யும். விண்கலத்தில் உள்ள 7 சாதனங்கள், இந்த ஆய்வில் ஈடுபடும் என்றனர்.