'எங்கள் விமானப்படை தளத்தை இந்தியா தாக்கியது உண்மையே': பாக்., பிரதமர்
'எங்கள் விமானப்படை தளத்தை இந்தியா தாக்கியது உண்மையே': பாக்., பிரதமர்
ADDED : மே 18, 2025 01:15 AM

புதுடில்லி: 'விமானப்படை தளங்களை இந்தியா தாக்கவில்லை' என பாகிஸ்தான் கூறி வந்த நிலையில், ''நுார் கான் விமானப்படை தளம் உட்பட பல இடங்களில், இந்தியா ஏவுகணை தாக்குதலை நடத்தியது உண்மை தான்,'' என, அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாக்., தாக்குதல் நடத்தியதை அடுத்து, அந்நாட்டின் விமானப்படை தளங்கள், ராணுவ நிலைகளை நம் ராணுவம் தகர்த்தது. ஆனால், இதை பாக்., மறுத்தது.
இந்நிலையில், இஸ்லாமாபாதில் நடந்த நிகழ்ச்சியில், பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது:
மே 9 - 10க்கு இடைப்பட்ட இரவில், அதிகாலை 2:30 மணி அளவில் ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர், தொலைபேசியில் என்னை அழைத்தார்.
அப்போது, நுார் கான் விமானப்படை தளங்கள் உட்பட பல இடங்களில் ஏவுகணைகளை வீசி இந்தியா தாக்கியதாக கூறினார். இதற்கு, பாக்., ராணுவமும் பதிலடி கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.
'விமானப்படை தளங்களை இந்தியா தாக்கவில்லை' என பாக்., கூறி வந்த நிலையில், தற்போது முதன்முறையாக நம் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதை, அந்நாட்டின் பிரதமரே ஒப்புக் கொண்டுள்ளார்.