அண்டை நாடுகளில் பாக்., மட்டும் தனி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பளீச்
அண்டை நாடுகளில் பாக்., மட்டும் தனி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பளீச்
ADDED : ஜன 19, 2025 02:34 AM

மும்பை, புகழ்பெற்ற சட்ட நிபுணர் நானி பல்கிவாலா நினைவு 19வது சொற்பொழிவு நிகழ்ச்சி, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
சர்வதேச அளவில் நாடுகளுக்கு இடையேயான வேற்றுமைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் முயற்சிகளுக்கு உறுதி அளிக்கும் வகையில், நானி பல்கிவாலாவின் சிந்தனைகள் அமைந்துள்ளன.
நம் நாட்டின் சொந்த இலக்குகள் அதிகரித்து, விக் ஷித் பாரத் எனப்படும் வளர்ந்த நாடு என்ற நிலையை நோக்கி நாம் பயணிக்கிறோம்.
இதற்கு, அவருடைய கருத்துகள், சிந்தனைகள் உதவுகின்றன. நம் நாட்டின் மற்றும் உலகளாவிய நலன்களை எட்டுவதற்கு நாம் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.
இதன்படி, அண்டை நாடுகளுடன் சிறப்பான நட்புறவையே நாம் விரும்புகிறோம். நாடு பிரிவினையை சந்தித்த பின், நல்ல அண்டை நாட்டை உருவாக்க முயற்சித்தோம். வெறும் வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், பிரதிபலன் எதிர்பார்க்காமல் தாராளமாக உதவிகளையும் செய்து வருகிறோம்.
இதற்கு உதாரணமாக இலங்கை உள்ளிட்ட நாடுகளை நாம் கூறலாம். ஆனால், பாகிஸ்தான் இதில் விதிவிலக்காக உள்ளது.
பாகிஸ்தான் உடனான உறவு மோசமடைந்ததற்கு நாம் காரணம் அல்ல. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அது தொடர்ந்து ஆதரித்து வருகிறது. அது உருவாக்கிய அந்த புற்றுநோய், தற்போது அந்த நாட்டையே பாதிக்க வைத்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

