ADDED : அக் 25, 2025 04:09 AM

புதுடில்லி: ''ஐ.நா., தற்போது சரியாக செ யல்படுவதில்லை, அதன் விவாதங்கள் ஒருபக்க சார்புடையதாக மாறியுள்ளன,'' என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று கடுமையாக விமர்சித்தார்.
டில்லியில் வெளியுறவு அமைச்சக வளாகத்தில், ஐ.நா.,வின் 80வது ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் பேசியதாவது:
ஐ.நா., சபை தற்போது சரியாக செயல்படவில்லை. அதன் முடிவெடுக்கும் நடைமுறை, அதன் உறுப்பு நாடுகளின் எண்ணங்களையும், தேவைகளையும் பிரதிபலிக்கவில்லை.
அதன் விவாதங்கள் பெரும்பாலும் ஒருபக்க சார்புடையதாக மாறிவிட்டன. அதன் செயல்பாடு முடங்கி உள்ளது.
சீர்திருத்தம் செய்ய முயன்றால், அதையே தடுக்கின்றனர். தற்போது நிதி நெருக்கடியும் ஐ.நா.,வுக்கு ஒரு கூடுதல் பிரச்னையாக உருவாகியுள்ளது.
ஐ.நா., எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பயங்கரவாதம். பஹல்காம் போன்ற கொடூரமான தாக்குதலுக்கு பொறுப்பேற்ற அமைப்பை, ஒரு பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் நாடு வெளிப்படையாகப் பாதுகாக்கிறது. இந்நிலையில், ஐ.நா., எப்படி பல நாடுகளின் உறவின் நம்பகத்தன்மையை காப்பாற்றும்.
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், அதை நிகழ்த்தியவர்களையும், சர்வதேச உத்தி என்ற பெயரில் ஒரே தட்டில் வைத்து பார்க்கக் கூடாது. அது இரட்டை வேடம்.
பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என சொல்லிக்கொண்டு, பயங்கரவாதிகள் என ஒப்புக்கொண்டவர்களை காப்பாற்றும் நாடுகளின் நேர்மை எங்கே போனது.
இவ்வாறு அவர் பேசினார்.

