காஷ்மீரில் ராணுவ கேப்டன் வீரமரணம்: பயங்கரவாதிகளை வேட்டையாட கூடுதல் படை!
காஷ்மீரில் ராணுவ கேப்டன் வீரமரணம்: பயங்கரவாதிகளை வேட்டையாட கூடுதல் படை!
UPDATED : ஆக 14, 2024 02:14 PM
ADDED : ஆக 14, 2024 02:04 PM

ஸ்ரீநகர்: காஷ்மீரின் தோடாவில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கேப்டன் வீர மரணம் அடைந்தார். பதுங்கியுள்ள 4 பயங்கரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கடந்த சில வாரங்களாக ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகம் நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் களத்தில் இறங்கி உள்ளனர். எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ உதவிய, கட்டால் கிராமத்தை சேர்ந்த மன்னன் முகமது லத்தீப், அக்தர் அலி, சதாம் உள்ளிட்ட 9 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
தேடுதல் வேட்டை
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 14) தோடாவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில், ராணுவ கேப்டன் தீபக் சிங் வீரமரணம் அடைந்தார்.
28 பேர் உயிரிழப்பு
பதுங்கியுள்ள 4 பயங்கரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். முன்னதாக, ஹவில்தார் தீபக்குமார் யாதவ், லான்ஸ் நாயக் பிரவின் சர்மா ஆகியோர் ஆக.,10ல் நடந்த என்கவுன்ட்டரில் வீரமரணம் அடைந்தனர். ஜூலை மாதத்தில் மட்டும், பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 28 பேர், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களால் உயிரிழந்துள்ளனர். இதனால் கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.