ஜான்சன் நிறுவனம் ரூ.125 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
ஜான்சன் நிறுவனம் ரூ.125 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : அக் 17, 2024 02:41 AM
வாஷிங்டன், அக். 17-
ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் பவுடரை பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்த அமெரிக்க நபருக்கு, 125 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும்படி அந்நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருந்து தயாரிப்பு நிறுவனமான பிரபல ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்துக்கு எதிராக, அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த இவான் ப்ளாட்கின் என்பவர், 2021ல் கனெக்டிகட் சுப்ரீயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு:
ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் முக பவுடரை பல ஆண்டுகளாக பயன்படுத்தினேன்.
அதனால் எனக்கு, அரிய வகை புற்றுநோயான, 'மீசோதெலியோமா' பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை சமீபத்தில் விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட இவான் ப்ளாட்கினுக்கு, 125 கோடி ரூபாய் வழங்கும்படி ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
இது குறித்து ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'எங்கள் நிறுவனத்தின் பவுடர் பாதுகாப்பானது. அது புற்றுநோயை ஏற்படுத்தாது. இந்த உத்தரவை எதிர்த்து நாங்கள் மேல் முறையீடு செய்வோம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

