சேட்டை! மத்திய அரசுக்கு சம்மன் அனுப்பிய அமெரிக்கா: காலிஸ்தான் பயங்கரவாதி வழக்கில் விஷமம்
சேட்டை! மத்திய அரசுக்கு சம்மன் அனுப்பிய அமெரிக்கா: காலிஸ்தான் பயங்கரவாதி வழக்கில் விஷமம்
ADDED : செப் 20, 2024 12:50 AM

புதுடில்லி: தன்னை கொல்ல முயற்சி நடந்தது தொடர்பாக, காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருக்கு அமெரிக்க நீதிமன்றம், 'சம்மன்' அனுப்பியுள்ளது. இதற்கு, மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சீக்கியருக்கு நீதி என்ற தடை செய்யப்பட்ட அமைப்பை நடத்தி வரும் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான், அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இந்தியா மற்றும் கனடா குடியுரிமை பெற்றுள்ள இவர் மீது, இந்தியாவில் பல தேசவிரோத வழக்குகள் உள்ளன; தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பன்னுானை கொலை செய்வதற்கு நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாக, அமெரிக்க அரசு கடந்தாண்டு நவம்பரில் தெரிவித்தது.
புகார்
மேலும், இதில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாகவும் புகார் கூறப்பட்டது. அப்போது, இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக விசாரிக்க உயர்நிலை குழுவையும் மத்திய அரசு அமைத்தது.
இந்நிலையில், நியூயார்க்கில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில், பன்னுான் தரப்பில் தற்போது வழக்கு தொடரப்பட்டது. அதில், தன்னை கொல்வதற்கு மத்திய அரசு சதி செய்ததாக அவர் கூறியுள்ளார்.
இதை ஏற்ற நீதிமன்றம், மத்திய அரசு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், 'ரா' உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் சமந்த் கோயல், 'ரா' ஏஜன்ட் விக்ரம் யாதவ், இந்திய தொழிலதிபர் நிகில் குப்தா ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து, நம் வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி நேற்று கூறியுள்ளதாவது:
இது ஆதாரமில்லாத பொய் குற்றச்சாட்டு. இதை ஏற்கனவே பலமுறை கூறியுள்ளோம். இந்த விவகாரம் தொடர்பாக நமக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட உடனேயே, அதில் நடவடிக்கையை துவக்கியுள்ளோம். உயர்நிலைக் குழு விசாரித்து வருகிறது.
எதிர்கொள்வோம்
இந்நிலையில், பன்னுான் தொடர்ந்த வழக்கில், அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
இது முழுக்க முழுக்க தேவையில்லாத, பொய் குற்றச்சாட்டின் அடிப்படையிலான வழக்கு. இதை உரிய முறையில் எதிர்கொள்வோம்.
வழக்கு தொடர்ந்துள்ளவரின் பின்புலம் குறித்து அமெரிக்காவுக்கு நன்கு தெரியும்.
இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து ஆட்சேபகரமாக, பிரிவினையை ஏற்படுத்தும் கருத்துக்களை அவர் வெளியிட்டு வந்துள்ளார்.
அவர் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் அவர் மீதுள்ள வழக்குகளின் அடிப்படையில், அவரை அமெரிக்கா ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, வரும் 21 - 23ல் மூன்று நாள் பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளார். இந்நிலையில், இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ள விவகாரம் எழுந்துள்ளது.