''ஆடம்பர பொருள் வாங்கணும், ஜீவனாம்சம் ரூ.6 லட்சம் வேணும்'': கேட்டதும் கொதிச்சுட்டார் நீதிபதி
''ஆடம்பர பொருள் வாங்கணும், ஜீவனாம்சம் ரூ.6 லட்சம் வேணும்'': கேட்டதும் கொதிச்சுட்டார் நீதிபதி
UPDATED : ஆக 22, 2024 05:08 PM
ADDED : ஆக 22, 2024 01:05 PM

பெங்களூரு: கணவரிடம் இருந்து செலவுக்கு மாதம் ரூ.6,16,300 ஜீவனாம்சம் பெற்றுத்தர கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண்ணிடம், 'தனியாக வாழும் உங்களுக்கு இவ்வளவு செலவுகள் தேவையா, பணம் வேண்டுமென்றால் சம்பாதித்துக்கொள்ளுங்கள்' என நீதிபதி காட்டமாக தெரிவித்தார்.
கணவரிடம் இருந்து விவாகரத்து கோரும் மனைவி, தன்னுடைய மற்றும் தன் குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்காக அடிப்படை தேவைகளை கணக்கிட்டு, குறிப்பிட்ட தொகையை ஜீவனாம்சம் கேட்பது இயல்பானது. மனைவி கேட்கும் தொகையை அப்படியே கொடுக்க நீதிமன்றமும் சம்மதிக்காது. மனைவியின் கோரிக்கையில், அடிப்படை தேவைகளுக்கான தொகை, கணவரின் சம்பளம் ஆகியவற்றை கணக்கிட்டு குறிப்பிட்ட தொகையை ஜூவனாம்சம் கொடுக்க உத்தரவிடும்.
ஆனால், கர்நாடகாவை சேர்ந்த ராதா முனுகுந்தலா என்ற பெண், தனக்கு மாதம் ரூ.6,16,300 ஜீவனாம்சம் வழங்க தன் கணவருக்கு உத்தரவிடக்கோரி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு ஆகஸ்ட் 20ல் விசாரணைக்கு வந்தபோது, பெண்ணின் மனுவை பார்த்து நீதிபதி அதிர்ச்சியடைந்தார். இவ்வளவு தொகையை கேட்பது என்ன நியாயம் எனக் கேட்ட நீதிபதியிடம், பெண்ணின் தரப்பு வழக்கறிஞர், ரூ.6,16,300-ஐ நியாயப்படுத்தும் விதமாக செலவுகளை பட்டியலிட்டார்.
செலவு கணக்கு
அதன்படி, 'செருப்பு, ஆடைகள், வளையல் மற்றும் மற்ற பொருட்கள் வாங்க மாதம்தோறும் ரூ.15 ஆயிரமும், வீட்டில் உணவு சமைத்து சாப்பிட ரூ.60 ஆயிரமும், உணவகம் உள்ளிட்ட வெளி இடங்களில் உணவுக்கு சில ஆயிரங்களும், முழங்கால் வலி மற்றும் பிசியோதெரபி சிகிச்சை, மருத்துவ செலவுக்கு ரூ.4 முதல் 5 லட்சமும் என மாதத்திற்கு ரூ.6,16,300 தேவைப்படுகிறது. அந்த தொகையை கணவர் வழங்க வேண்டும்' என ராதா தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
இதனை கேட்டதும் கோபமடைந்த நீதிபதி, ''குடும்ப பொறுப்புகள் எதுவுமின்றி தனித்து வாழும் பெண்ணுக்கு இவ்வளவு செலவுகள் தேவையா? அவருக்கு பணம் வேண்டுமென்றால், சம்பாதிக்க சொல்லுங்கள். கணவரிடம் இருந்து இதனை எதிர்பார்க்க வேண்டாம். உங்களின் அடிப்படை தேவைக்கு மட்டும் என்ன பணம் வேண்டுமோ அதனை கேளுங்கள்.
எச்சரிக்கை
பெண்ணிடம் சண்டையிட்டு பிரிந்ததற்காக இவ்வளவு பணத்தை தர வேண்டும் என்று கணவருக்கு தண்டனை தர முடியாது. கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்யாவிட்டால் மனு தள்ளுபடி செய்யப்படும்,'' என எச்சரித்தார். வழக்கு வாதத்தின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.