போலீசாருக்கு பயந்து பரணில் ஒளிந்த சமாஜ்வாதி மாஜி எம்பி கைது: வீடியோ வைரல்
போலீசாருக்கு பயந்து பரணில் ஒளிந்த சமாஜ்வாதி மாஜி எம்பி கைது: வீடியோ வைரல்
ADDED : செப் 05, 2025 04:23 PM

கன்னோஜ்; உ.பி.யில் வீட்டின் பரண் மேல் பதுங்கிய சமாஜ்வாதி முன்னாள் எம்பியை போலீசார் கைது செய்த வீடியோ வைரலாகி இருக்கிறது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
உ.பி. மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தை சேர்ந்தவர் சமாஜ்வாதி தலைவர் கைஷ்கான். கட்சியின் பொருளாளராக இருக்கும் இவர் முன்னாள் எம்பியும் கூட. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு மிகவும் நெருக்கமானவர்.
நில அபகரிப்பு உள்ளிட்ட 5 கிரிமினல் வழக்குகள் கைஷ்கான் மீது உள்ளன. அதன் காரணமாக அவர் கடந்த ஜூலை 28 முதல் 6 மாதங்களுக்கு கன்னோஜ் மாவட்டத்திற்குள் நுழையக்கூடாது நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆனால் தடையை மீறி கைஷ்கான் தனது வீட்டில் இருக்கும் விவரம் போலீசாருக்கு தெரிய வந்தது. உடனடியாக பெரும் படையுடன் அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார் கைஷ்கான் அங்கு இருக்கிறாரா என்று சோதனை நடத்தினர்.
போலீசாரின் வருகையை எப்படியோ மோப்பம் பிடித்த மிகவும் புத்திசாலித்தனமாக யோசிப்பதாக நினைத்துக் கொண்டு வீட்டினுள் இருக்கும் பரணில் ஏறி ஒளிந்து கொண்டார். வீடு முழுக்க தேடிய போலீசாருக்கு பரண் மீது பச்சை துணி போர்த்தப்பட்டு இருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
உடனடியாக அந்த துணியை விலக்கி பார்த்த போது, கைஷ்கான் அங்கு ஒளிந்து கொண்டிருப்பதைக் கண்டனர். உடனடியாக அவரை கீழே இறக்கி கைது செய்தனர். அதன் பின்னர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை கடுமையாக எச்சரித்து நிபந்தனை ஜாமினில் நீதிமன்றம் விடுவித்தது.